Tuesday, December 29, 2015

Brooklyn - Colm Toibin - பன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/12/20/multifaceted-reading-possibilities/)
-----------

ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உறவாகும்போது மீண்டும் தாய் நாடு செல்ல வேண்டிய சூழல் அப்பெண்ணிற்கு. அங்கு இன்னொரு (உயர்குடியைச் சேர்ந்த) இளைஞன் அவள்பால் ஈர்க்கப்படுகிறான். அப்பெண் மனத் தடுமாற்றம் கொள்கிறாளா, தன் வாழ்க்கை குறித்து  என்ன முடிவெடுக்கிறாள் என்பது கலம் டுபீனின் (Colm Toibin) ‘Brooklyn’  நாவலின் இறுதிப் பகுதி. நாவலின் உள்ளடக்கத்திற்கு கிஞ்சித்தும் நியாயம் செய்யாத இந்தக் கதைச் சுருக்கம், வழக்கமான முக்கோணக் காதல் கதையைச் சுட்டுவதாகத் தோன்றினால், அது ‘கதைச்சுருக்கம்’ என்பதன் போதாமையே தவிர நாவலின் தரம் குறித்த சரியான  மதிப்பீடாகாது. இந்தக் கட்டுரைக்கு ஒரு பின்புலமாக மட்டுமே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாவலைப் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, அது குறித்து  வெளிவந்துள்ள/ வருகிற எதிர்மறை விமர்சனங்களில் இரண்டு கருத்துகள் முக்கியமாக மீண்டும் மீண்டும்  சொல்லப்படுகின்றன. ஒன்று,  அதன் முக்கிய பாத்திரமான எல்லிஸின் (Ellis)  ‘செயலின்மை’.    தன்னிச்சையான முடிவெடுக்கத் தெரியாதவராக, அலைபாயும் மனமுடையவராக  உருவகித்து இறுதியில்  நம்பிக்கை துரோகியாக, ஏமாற்றுக்காரியாக அவரை வாசகன் பார்க்கும் முடிவிற்கும் அது இட்டுச் செல்கிறது.  நாவலில் ‘கதை’ என்பதே இல்லை (‘கதை’ என்பதன் வரையறை என்ன என்பதை தனிக் கட்டுரையாக பார்க்க வேண்டும்),  இதன்  மூன்று பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளும் அவற்றின் சம்பவங்களும் எந்தத்  தொடர்பும் இன்றி சிதறிக் கிடந்து   வாசகனுக்கு  எதையும் சொல்வதில்லை,  அதன் இறுதிப் பகுதியில் வரும் நிகழ்வுகள் மட்டுமே நினைவில் தங்குகின்றன. நாவலே இறுதிப் பகுதியின் பலத்தில்தான் நிற்கிறது  என்பது இரண்டாவது விமர்சனம். நேரடியான வாசிப்பில் நாவல் குறித்து இத்தகைய ஒரு பார்வை  சாத்தியம்தான் என்றாலும், நாவலை மீள் பார்வை செய்து இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத் தாண்டிய இன்னொரு கோணத்தையும் வாசகன் காணக் கூடுமா என்பதை இக்கட்டுரையில் ஆராய்வதின் மூலம், எந்தத் தரப்பையும்  முற்றிலுமாக மறுதலிக்காமல், அதே நேரம் இலக்கியத்தின்  பன்முகப்பட்ட வாசிப்பின் சாத்தியத்தை நாம் அறியவரக்கூடும்.
சம்பவம் 1:
குடும்பத்தை விட்டு பிரிந்து அயர்லாந்திலிருந்து அமெரிக்கா வந்து ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் இளம் பெண்ணான எல்லிஸ் (Ellis), தன் விடுமுறை நாளை  காதலனுடன் கடற்கரையில் செலவிட முடிவு செய்கிறார்.  அதற்குத் தகுந்த உடையை (bathing suit) தேர்வு செய்ய அவருடைய பெண் மேலதிகாரி உதவுகிறார்.  எல்லிஸின் உடலை அவர் தொடுவது, ஆடை அணிவிப்பது என அவருடைய சுவாதீனமான நடவடிக்கை எல்லிஸை அசௌகர்யப்படுத்துகிறது. (மேலதிகாரிக்கும் ஒரு காதலன் இருக்கிறான் என்பதால் , அவர் நடத்தையில் பாலியல் விழைவு உள்ளது என்பது போன்ற வாசிப்பிற்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்)  எனினும் எல்லிஸ் தன் கூச்சத்தை வெளியே சொல்வதில்லை.
சம்பவம் 2:
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் இருக்கும் எல்லிஸ், தன் மனத்துயர் குறித்து யாருடனும் பகிர முடியாத மனநிலையில் உள்ளார் என்பதை டூபின்
None of them could help her. She had lost all of them. They would not find out about this; she would not put it into a letter. And because of this she understood that they would never know her now. Maybe, she thought, they had never known her, any of them, because if they had, then they would have had to realize what this would be like for her.” 
என்று சுட்டுகிறார்.
இரண்டு சம்பவங்களும் நேரடியான தொடர்பு கொண்டவையல்ல என்றாலும், இரண்டாம் சம்பவம், மற்றவர்களிடம் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மிகவும் தயங்கும் எல்லிஸின்
குணத்தை வெளிப்படுத்தி முதல் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் அதே நேரத்தில், மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. அவரின் ‘செயலின்மையாக’ சுட்டப்படுவது உண்மையில் தன்னுள்ளேயே சுருங்கிக் கொள்ளச் செய்யும் அவர் அகத்தின் தயக்கம்தான்.   
அயர்லாந்தில் விதவைத் தாய் மற்றும் மூத்த சகோதரி ரோஸுடன்  வசிக்கும் எல்லிஸிற்கு, ஒரு பாதிரியின் உதவியால் அமெரிக்காவில் வேலை கிடைக்க, அவர் அங்கு அனுப்பப்படுகிறார். அயர்லாந்தைவிட அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பதால்  அங்கு இங்குள்ளதைவிட மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று கருதி ரோஸ் இந்த முடிவெடுக்கிறார்.   மூத்த பெண் என்பதால்  குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை – முப்பது வயதான, யாரையும் திருமணம் செய்யாத, தங்கையின் படிப்புச் செலவை ஏற்கும், வேலையில் நேர்த்தியாக இருக்கும், இவை அனைத்தையும்   தனக்குள்ள சிக்கல்களை வெளிக்காட்டாமல்  திறம்பட செய்யும் – அழகி ரோஸின் பார்வையில் அவர் எடுக்கும் முடிவு மிகச் சரி என்றாலும்
எல்லிஸிற்கு  நன்மை செய்வதாக எண்ணி அவர் இதைச் செய்யும்போது, சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து   அங்குச் செல்வது குறித்து  எல்லிஸிற்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடும் என்பதை அவர் கருத்தில் கொள்வதில்லை.   எல்லிஸிற்கு முற்றிலும் நேர்மாறான  ரோஸின்  பாத்திரம், எல்லிஸை புரிந்து கொள்ள உதவக் கூடும். ஒருவேளை சிறு வயதிலியே எல்லிஸும்  ரோஸ் போல் மன ரீதியாக முதிர்ந்திருந்தால் பல அசந்தர்ப்பமான நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் ரோஸ் ஏன் அவரிடம் அமெரிக்கா செல்வது குறித்த அபிப்பிராயம் கேட்கவில்லை? எல்லிஸிற்கு கூட இது குறித்து நேர்மையாகவோ/ எதிர்மறையாகவோ அதிகம் சொல்ல எதுவும் இல்லை என்றோ அல்லது அதைச் சொல்ல அவர் விரும்பவில்லை என்றோ தோன்றுகிறது. இங்கும் அவர் அகத்தில் உறைந்திருக்கும் தயக்கத்தையே உணர முடிகிறது. இவற்றிக்கான  காரணங்களை அவர் அமெரிக்கா சென்றபின் நடக்கும் நிகழ்வுகளில் தேடிப்  பார்க்கலாம்.
நாவல் குறித்த இரண்டாவது முக்கிய எதிர்மறை விமர்சனமான  – சம்பவங்கள் தொடர்பற்று இருக்கின்றன என்பதை  கலம் டுபீனின் இன்னொரு நாவலான  ‘The Blackwater Lightship‘ நாவலுடனேயே ஒப்பிடலாம்.  அதிலும்  சம்பவங்கள் நேரடி தொடர்புள்ளவையாக டுபீனால் சொல்லப்படாவிட்டாலும்  அவை தன்னியல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி விடுகின்றன. இந்த அம்சம் ‘Brooklyn’ நாவலில் இல்லை என்பதால், இவற்றைத் தொகுப்பதில் வாசகனின் பங்கு அதிகம் உள்ளது. இது பலரை நாவலிலிருந்து அந்நியப்படுத்தும் என்றாலும், வாசகனின் அதிக உழைப்பைக் கோரும் இத்தகைய வாசிப்பும் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் அல்லவா?  இங்கு நாவலின் இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் டோனி (Tony) எனும் இத்தாலிய இளைஞனை எல்லிஸ் சந்திக்கிறாள்.   டோனி அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளும் தடை சொல்வதில்லை (இவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்). ஒரு முறை  தாய்/ தந்தை, மூன்று சகோதரர்களுடன் வசிக்கும் (கூட்டுக் குடும்ப)  வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது/ சீண்டிக் கொள்வது இவற்றை சற்றே அன்னியத்தன்மையோடு எல்லிஸ் கவனிக்கிறாள். இந்தச் சம்பவம்  குறித்து ஒரு பேட்டியில் டூபின் “They’re all just so good with each other. And one watches this in life with fascination and envy. I would love to have been brought up like that. But Ireland’s not like that.” என்று குறிப்பிடுகிறார். இதில் எல்லிஸின் செயல்/ செயலின்மைக்கான ஒரு விளக்கம் உட்போதிந்துள்ளது.  பாசமும் நேசமும் குடும்பத்தில் இருந்தாலும், அதைத் தளர்வான (informal) முறையில் வெளிப்படுத்தும்  சூழலில் எல்லிஸ் வளராததால்,அவளால் தன் உணர்வுகளைத் தெளிவாக சொல்ல முடிவதில்லை என்று   புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்வும் கதையின் மையத்திற்கு நேரடியான தொடர்பு கொண்டதல்ல என்பதால், இதை வாசகன் எளிதில் கடந்து சென்றுவிடக் கூடும். ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால்
இப்படி தொடர்பற்றவையாகத் தோன்றும் பல நிகழ்வுகள் எல்லிஸின் மனச் சங்கிலியின் கண்ணிகள் தான் என்று வாசகன் அவதானிக்கலாம். அது எல்லிஸ் குறித்த அவன் பார்வையை விரிவடையச் செய்யக் கூடும்.
எல்லிஸின் மனவுலகை நுட்பமாக உருவாக்கும் அதே நேரத்தில் டூபின் 50களின் Brooklyn நகரில், கனவுலகைப் போல் தோற்றமளிக்கும் அமைதியான “… quietness of these few leafy, streets that had shops only on the corners, streets where people lived” காட்சிகளோடு, நிஜ உலகில் தள்ளும் பரந்த வீதிகளையும், அவற்றை முற்றிலும் நிரப்பும் மனிதர்களையும்/ வாகனங்களையும் பார்க்கும்போது நாளுக்கு நாள் உருமாறிக்கொன்டிருக்கும், பல நாடுகளிருந்தும் எண்ணற்றோர்  புலம்பெயர்ந்து கொண்டிருக்கும்  ஒரு நகரின்  சித்திரத்தையும் உருவாக்குகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவருக்கு துணிகள் விற்பதற்கு எல்லிஸ் வேலை செய்யும் கடை முடிவு செய்வது நாவலில் வரும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல.
அம்முடிவு குறித்த எல்லிஸின் எதிர்வினைக்கும் , மற்ற பெண் விற்பனையாளர்களின்  எதிர்வினைக்கும் உள்ள வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அயர்லாந்தில் தன் சொந்த ஊரில் கறுப்பினத்தவரை கண்டிராத/ அறிந்திராத எல்லிஸிற்கு கடையில் அவர்களை அனுமதிப்பது என்ற  முடிவு எந்த பெரிய சலனத்தையும்  ஏற்படுத்துவதில்லை, ஆனால்
கடையின் மற்ற பெண் விற்பனையாளர்கள் இதை எதிர்கொள்ளும் விதம் – ஆப்பிரிக்க அமெரிக்க இனப் பெண்கள் கடைக்குள் வந்தால் இடமே அமைதியாவது, ஓரக்கண்ணால் வந்தவர்களைக் கவனிப்பது, தங்கள் வீட்டில் இது குறித்து தெரியவந்தால் அவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்று தங்களுக்குள்ளேயே  கேள்வி எழுப்புவது – ஆகியவை ஒரு காலகட்ட சமூகச் சூழலின் பிரதிபலிப்பும் கூட. இது குறித்து அதிகம் கவலைப்படாத எல்லிஸ், மற்றொரு பெண் முன் உடைமாற்றுவது குறித்து வெட்குவதை கலாசார வேறுபாடு என்று சொல்லலாமா? உடை தேர்வு செய்யும்போது, இத்தாலிய ஆண் தன் இணை கடற்கரையில் எப்படி தோற்றமளிக்கிறாள் என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவன் என எல்லிஸின் மேலதிகாரி கூற,
‘In Ireland no one looks, Ellis said. It would be bad manners.’
‘In Italy it would be bad manners not to look’.
என்று நடக்கும் உரையாடலில் கலாசார வேறுபாடு மட்டும் தெரிவதில்லை. எல்லிஸும் சரி அவள் மேலதிகாரியும் சரி அமெரிக்கா என்று குறிப்பிடாமல் Ireland/ Italy என்று சொல்வது, தங்களை அவர்கள் இன்னும்  முழுதாக அமெரிக்காவினுள் ஐக்கியப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுடன் புலம்பெயர்ந்தவர்களின் ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளது. (இவர்கள் இருவரின் பிள்ளைகள்/ பேரப்பிள்ளைகள் தங்களை அமெரிக்கர்களாக மட்டுமே கருதக்கூடும் என்பதையும் நினைவில் கொள்வோம்)
எந்த ஆப்பிரிக்க- அமெரிக்க  பெண்ணும் தனியாக கடைக்கு வராமல் இரண்டு-மூன்று பேராக வருவது, நேர்த்தியாக உடையணிந்திருக்கும் அப்பெண்கள், விற்பனையாளர்களுடன் அதிகம் பேசாதது (கர்வத்தால் அல்ல, இனம் சார்ந்து இருக்கும் இடைவெளி என்று வாசகன் புரிந்து கொள்ள முடியும்)  என அவர்கள் நடந்து கொள்வதையும்  ஒரு விதத்தில் புலம் பெயர்ந்தவர்களின் கலாசார வேறுபாட்டால் புரிந்து கொள்ளலாம். எல்லிஸ் நாடு விட்டு நாடு வந்திருந்தால், இப்பெண்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே வெளியாட்களாக இருந்து,  இப்போது தான் தங்கள் தேசத்தின் சில காட்சிகளை காண்கிறார்கள்.
இப்படி தொடர்பற்றவையாக தோன்றும்  நிகழ்வுகளும் எல்லிஸின் மனவுலகோடு அவரின் புற உலகையும் நாவலினுள் உருவாக்குகின்றன எனபதால் அவை நாவலின் கட்டமைப்பிற்கு தேவையானவைதான் என்று சொல்லலாம்.
டோனியின் துணையும், பகுதி நேரப் படிப்பும் எல்லிஸின் மனதை ஆற்ற ஆரம்பிக்கும் வேளையில் அவர் குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத துயர நிகழ்வால், தாயை கவனித்துக்கொள்ள  எல்லிஸ் மீண்டும் அயர்லாந்து திரும்ப வேண்டியுள்ளது. தன்னைப் பிரிய மனமே இல்லாமல் டோனி துயருற, மீண்டும் சொந்த ஊர் வரும் எல்லிஸ் வீட்டை கவனித்துக் கொள்கிறாள். ஜிம் (Jim) என்ற சற்றே மேட்டுக்குடி இளைஞனுடன்  அவளுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. ஜிம் அவள்பால் ஈர்க்கப்படுகிறான், அவளை மணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவன் வந்து விட்டது போல்  தெரிகிறது. எல்லிஸ்   என்ன செய்கிறாள்? தன் தோழியின்  கணவனின் நண்பனான அவனுடன், குழு சுற்றுலா செல்கிறாள், அவனுடன் கனிவாக நடந்து கொள்கிறாள் ஆனால் டோனி பற்றி ஒன்றும் சொல்வதில்லை, அதே நேரம் ஜிம்மை அதிகம் ஊக்குவிப்பதும் இல்லை, அவன் தன் மீது செலுத்தும் கவனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள் அவ்வளவே. டோனி அனுப்பும் கடிதங்களை படிப்பதையும் அவள் நிறுத்தி விடுகிறாள். இங்கு எல்லிஸின் நடவடிக்கை/ நடவடிக்கையின்மையை  நம்பிக்கை துரோகமாக பார்க்கும் சாத்தியம் உள்ளதுதான்.
இங்கு இடைவெட்டாக நாவலின் முதல் பகுதியிலிருந்து  ஓர் சம்பவம். அமெரிக்கா வந்த முதல் சில நாட்களில், மிகவும் மனச் சோர்வுற்றிருக்கும் எல்லிஸ், காலையில் வேலைக்குச் செல்லும் வழியில் உணவருந்த ஓர் விடுதிக்கு செல்கிறாள். அவள் முகத்தைப் பார்த்து அவளின் சோகத்தை யூகிக்கும் விடுதி பணியாள் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று கேட்கிறான். இல்லை என்று அவள் சொன்ன பிறகும், மீண்டும் அதையே கேட்கும் அவன் உரத்தக் குரலில் “Cheer up…..Give us a smile.” என்று சொல்ல அந்தக் கரிசனத்தைக் தாங்க முடியாமல் அழுது விடுவோம் என்று அஞ்சி அங்கிருந்து ஓடி விடுகிறாள். பணியாளனின் செய்கை வெளிப்படையாகப் பேசும் அமெரிக்க குணம் அது, அவன் கரிசனம் தவறில்லை என்றாலும் அதைத் தாங்கும் வலு அவளுக்கு இல்லை. கரிசனத்தை அல்ல அவள் எதிர்பார்ப்பது, தன்னுடன் கை கோர்த்து நடக்கும் ஒரு சக ஜீவியை. டோனி அத்தகையவனாக உள்ளான்.  அவனின் வேகத்திற்கு தன்னால் செல்ல முடியாது என்ற உணர்வும்  எல்லிஸிற்கு இருந்தாலும், சக பயணியை அவள் இழக்க விரும்பவில்லை. டோனி எல்லிஸை காதலியாகப் பார்க்கிறான் என்றால் எல்லிஸ் அவனை தோழனாக மட்டுமே அதிகம் பார்க்கிறாள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த பேரவலச் சம்பவத்தின் தாக்கத்தில் அவள்  வாழ்வில்  முதல் முறையாக  அவனுடன் உடலுறவு கொண்டாலும் அதைக் காதல் என்றோ காமம் என்றோ அறிதியிட்டு கூற முடியாது. அப்போது அவள் அவனை உபயோகிக்கிறாள் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் டோனியும் தன் மனதின் விழைவுக்காகவே அவளுடன் பழகுகிறான் என்றும் சொல்லலாம், இதை இன்னும் விரிவாக்கி அனைத்து உறவுகளையுமே கொடுக்கல் வாங்கல் என்ற இரட்டை நிலைக்குள் அடக்கிவிடலாம். ஆனால் அப்படி எளிமையாக வகைபடுத்தக் கூடிய ஒன்றா மனித உறவுகள்? இவர்கள் உறவின் dynamic தெளிவான இடத்தை அடையும் முன், எல்லிஸ் மீண்டும் தன் தாய் நாடு திரும்ப வேண்டியுள்ளது. குடும்பத் துயரம் வேறு அவளை வாட்ட, அவள் திக்கு தெரியாதவள் போல் நடந்து கொள்வதில்  – அது மூன்று பேரின் வாழ்வை குலைத்துப் போடக்கூடும் என்றாலும் –  ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இறுதியில் எல்லிஸ் எடுக்க வேண்டிய முடிவிற்கும் கெல்லி (Kelly) என்ற பாத்திரமே  காரணமாக உள்ளார்.  இந்தப் பாத்திரத்தை நாவலோடு பொருந்தாத ஒன்றாக பார்க்க முடியும். மேட்டிமைத்தன்மை கொண்ட, அனைவரையும் எள்ளல்  செய்யும் இந்தப் பாத்திரம் நம்ப முடியாத ஒன்றோ / ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அல்ல. ஆனால் டூபின் முதலிலிருந்தே நாவலின் போக்கில் உருவாக்கும் சலனமின்மையை இந்தப் பாத்திரம், அமைதியான இடத்தில்  ஒருவர் உரத்தக் குரலெழுப்பி அந்தச் சூழலைக்  குலைப்பது போல் கலைத்து விடுகிறது. அந்த விதத்தில் இப்பாத்திரம் நாவலின் உலகோடு பொருந்தாமல், அதன்  பலவீனமாக உள்ளது.   மேலும் எல்லிஸை முடிவெடுக்கத் தூண்டும் நிகழ்வும் நாவலை அதன் இறுதி நிகழ்விற்கு திருப்ப வலிந்து செய்யப்பட்ட உத்தியாக உள்ளது.
இப்போது எல்லிஸ் காதலா அல்லது கடமையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எல்லிஸின் முடிவு தெரிந்தவுடன் அவர் இதைத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்று  பெரும்பாலான வாசகர்கள்  புரிந்து கொள்வது எதுவாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. அந்தப்  புரிதல் நியாயமானதும்  கூட. இருப்பினும் எல்லிஸின் தேர்வு இது தான்  என்று வாசகன் எதை முடிவு செய்தாலும் அதற்கு  நேர்மாறாக வாதிட  சாத்தியம் நாவலின் பக்கங்களின் உள்ளது.  அதாவது ஒரு வாசகன் அவர் காதலை தேர்வு செய்தார் என்று சொன்னால், இல்லை அவர் தேர்வு செய்தது கடமையை என்றும், எல்லிஸின் தேர்வு ‘கடமை’ என்று சொன்னால், இல்லை அது ‘காதல்’ என்றும்  இன்னொரு வாசகன்  வாதிடலாம். எனவே வாசகன் எந்தப் புரிதலுக்கு வந்தாலும் அதைச்  சற்றே மறுபரிசீலனை செய்தால், எந்த முடிவிலும்  அவர் பெறப்போவதற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாகவே இழப்பையும் துயரையும்  அடையக்  கூடும் ‘Catch-22’ சூழலில் அவர் இருக்கிறார் என்பதையும்  உணர முடியும்.  இந்த இரண்டு தேர்வையும் தவிர, சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவர் அந்த முடிவு எடுத்தார் என்றும் வேறொரு வாசகன் சொல்லலாம். அப்படி எண்ணும் வாசகன்
Eilis imagined the years ahead, when these words would come to mean less and less to the man who heard them and would come to mean more and more to herself. She almost smiled at the thought of it, then closed her eyes and tried to imagine nothing more.
என்ற இறுதி பகுதியை மீண்டும் வாசிக்க வேண்டும். அசோகமித்திரன் கதை ஒன்றில் கதைசொல்லி இரவு நடையின்போது ஒரு ஆணும்- பெண்ணும் (தம்பதியர் என்று புரிந்து கொள்ளலாம்) சண்டையிடுவதைப் பார்ப்பான். அப்பெண்ணின் துயர் அவனை பாதித்தாலும், தலையிடாமல் வந்து விடுவான். இரவு முழுதும் அவனை அது வாட்டும். அடுத்த நாள் அனைத்தும் சரியாகி விட்டது என்பதாக கதை முடிந்தாலும், அதில் அ.மி சொல்லாமல் எழுப்பும் கேள்வி  அவ்வளவு சீக்கிரம் அந்நிகழ்வை அவன் மறந்து விட முடியுமா என்பதுதான். அக்கேள்வியை இங்கும் மேலே உள்ள பத்தியோடு பொருத்திப் பார்க்கலாம். பல வருடங்கள் சென்றேனும் அவள் அமைதியடையக்கூடுமா, அப்படி அடைந்தாலும் அதுவரை அவள் அனுபவித்த வாதை?
நாவலில் எல்லிஸின் வயது குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘பெதும்பை’ பருவத்தில் அவள் இருப்பதாக யூகிக்கலாம். பேதைக்கும் மங்கைக்கும் இடையே உள்ள, தன்னைக் குறித்தும் வாழ்வு குறித்தும் தெளிவின்மையும் சலனங்களும் தோன்றும் இந்தப் பருவத்தில், குடும்பத்தைப் பிரிதல், குடும்பத்தில் இழப்பு போன்ற தொடர்   பாரத்தை சுமக்கும் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாத அப்பருவப் பெண், அது சார்ந்து தன் வாழ்வு குறித்த  மிக முக்கிய முடிவுகளை  எடுக்க வேண்டிய நிலையிலும்  இருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன்  பிறகும்,  அவளை .ஏமாற்றுக்காரியாகவோ, கோழையாகவோ, குறைந்தபட்சம் செயலின்மை கொண்டவளாகவோ சுட்ட முடியும் என்றாலும், இறுதிப் பத்தியின் மீள்வாசிப்பு தன் துயரை வெளிக்காட்டாமல், எந்தச்  சூழலிலும்   முடிந்தளவு அனைவருடனும் நேர்மையுடன் இருக்க முயன்று, அதில் தன்னை மீறி தோல்வியுற்று அதன் காரணமாக மனதில் பல ஆண்டுகள் ஒலிக்கப் போகும், மற்ற யாருக்கும் கேட்காத, வலியின் ஓலத்தை  தான் மட்டும் தனித்து கேட்டுக்கொண்டிருக்கப் போகும் ஒரு பெதும்பைப் பெண்ணின் உயிர்ப்புள்ள நெகிழ்வான சித்திரம் மனதில் தோன்றி மற்ற அனைத்தையும் விலக்குகிறது.

Monday, November 30, 2015

நவீன தேவதைக் கதைகள் 2 – ஆஞ்செலா கார்டரின் ‘THE BLOODY CHAMBER’ சிறுகதைத் தொகுப்பின் நவ யுக தேவதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/11/15/angela-carter/)
-------------------
இளவரசியால் முத்தமிடப்பட்ட தவளையும் (‘Frog Prince‘ கதையின் மூலப் பிரதியில் இளவரசி தவளையை தூக்கி எறிவதாக வருகிறது), அழகியின் கண்ணீரில் நனையும்Beastம் ராஜகுமாரனாக தங்கள் நிஜ உருவைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளை தேவதைக் கதைகளில் நாம் அடிக்கடி காண முடிகிறது. பிறகு ராஜகுமாரன் இளவரசியை/ ஏழைப்பெண்ணை மணந்து கொள்ள, அனைவரும் சந்தோஷமாக வாழ்வதாக முடியும் கதைகளில், இளவரசியோ ஏழையோ பொதுவாக பெண்தான் தன் கனவுகளை அடைவதாக, அவளே அதிர்ஷ்டசாலி என்ற கற்பிதம், வெகுஜனப் பிரக்ஞையில் உள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? இளவரசி முத்தமிடாமலோ/ தூக்கி எறியாமலோ, அல்லது Beauty கண்ணீர் சிந்தாமலோ இருந்திருந்தால், ராஜகுமாரர்களுக்கு விமோசனமே கிடைத்திருக்காது அல்லவா? எனில், இந்தக் கதைகளில் அதிக நன்மை அடைந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற கேள்வி எழுகிறது. ஆண்/ பெண் இருவருமே நன்மை அடைகிறார்கள் என்றும், ஆணுக்குச் சமமான, அவர்களுக்கு மீட்சியளிக்கும் சக்தியாக, பெண்ணும் இருக்கிறாள் என்றும் சொல்வதே சரியானதாக இருக்கும். இத்தகைய காக்கும்/ அழிக்கும் சக்தி பெற்ற பெண்களை ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber‘ சிறுகதைத் தொகுப்பின் சிலக் கதைகளில் பார்க்கிறோம்.
Beauty and the Beast‘ கதையின் மறு ஆக்கமான ‘The Courtship of Mr Lyon‘ கதையில், அழகி தன் தந்தை செய்த தவறுக்காக பீஸ்ட்டின் இருப்பிடத்தில் வசிக்க வேண்டியுள்ளது. அவள் அது குறித்து முதலில் அச்சுறுவது இயல்பான ஒன்று. ஆனால் ‘பீஸ்ட்’, அவள் மடியில் தலை புதைத்து கைகளை முத்தமிட்டபின் வெட்கி ஓடுவது, தன் தந்தை வீட்டிற்கு அவள் திரும்பும்போது அவள் கண்களைச் சந்திக்க இயலாமல் பாதங்களில் தலையைப் புதைத்துக் கொள்வது என அவன் அழகி மீது கொண்டுள்ள உணர்வை வழிபாடு என்றே சொல்லலாம். (as if he himself were in awe of a young girl). “Do not think she had no will of her own; only, she was possessed by a sense of obligation to an unusual degree and, besides, she would gladly have gone to the ends of the earth for her father, whom she loved dearly.” என்ற உணர்வோடு அங்கு வசிக்கும் அழகியை விட, பீஸ்ட்டே தப்பிக்க முடியாத/ விரும்பாத சூழலில் இருப்பவனாகத் தெரிகிறான்.
தேவதைக் கதைகளின் மறு ஆக்கமாக இல்லாதிருந்தாலும், அந்த வகைமையின் சிலக் கூறுகளைக் கொண்ட ‘The Lady of the House of Love’ மற்றும் ‘Wolf-Alice‘ கதைகளிலும் ஆணை காப்பாற்றும் பெண்மையைக் காண்கிறோம். முதல் கதையில், இளைஞர்களை உண்டு பசியாறும் இரத்தக் காட்டேரியான (vampire) சீமாட்டியின்/ Countess) மாளிகைக்கு ராணுவத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவன் வருகிறான். தன் வாழ்க்கை முறையை வெறுக்கும் அந்தச் சீமாட்டி தனக்கு விதிக்கப்பட்டதைத் தாண்டி செல்ல இயலாமலும் இருக்கிறாள். இளைஞன் அவள் மீது (அவள் காட்டேரி என்று அறியாமல்) கரிசனம் கொள்கிறான். அவனை பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும் சீமாட்டிக்கு விரலில் காயம் ஏற்பட்டு உதிரம் வெளிவர, இளைஞன் அதை முதலில் கைக்குட்டையால் துடைத்தும் பிறகு விரலை உறிஞ்சியும் / முத்தமிட்டும் அவளைத் தேற்ற, அவனது\ களங்கமின்மை, இறுதியில் சீமாட்டி அவனைக் கொல்லாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்ளச் செய்கிறது. இளைஞன் கன்னித்தன்மையை இழக்காதவன் என்பதால், ‘கன்னிமை’ பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு என்பது ஆணுக்கும் பொருந்தலாம் என்று ஆஞ்செலா சுட்டுகிறார் என்றும் கருதலாம்.
ஆணால் அணைக்கப்படுவது வரை ஒன்றுமறியாதவர்களாக/ உணராதவர்களாக இல்லாமல் அவர்களுக்குள் இயல்பாகத் தோன்றும் பாலியல் விழைவுகள், அது ஏற்படுத்தும் ஆர்வம் – அவற்றால் ஆபத்து ஏற்பட்டாலும், அதைக் கடந்தால் அடையக் கூடிய பரவசம் குறித்த எதிர்பார்ப்பு – குறித்தும் பதின் பருவம் அல்லது அதன் வாசலில் நிற்கும் இந்தக் கதைகளின் சிறுமிகள்/ யுவதிகள் தெளிவாக உள்ளார்கள். தேவதைக் கதைகளில் இதற்கு இடமிருக்கக் கூடும் என நாம் எண்ணிக் கூட பார்த்திராத, ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையே உருவாகி அவர்களைச் சுற்றிப் படர்ந்து மூச்சடைக்க வைக்கும் ‘sexual tension’ இந்தக் கதைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று தன் இருப்பை, பாத்திரங்களுக்கும் வாசகனுக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
Red Riding Hood கதையை மறு ஆக்கம் செய்யும் ‘The Company of Wolves‘ல் வரும் சிறுமிக்கு/ பதின்பருவத்தின் வாசலில் இருப்பவளுக்கு, இளைஞன் உருவத்தில் வருவது ‘ஓநாய்’ தான் என்று தெரிந்து விடுகிறது. காட்டிற்குள் வேறு பாதையில் அழைத்துச் செல்வதாக அவன் கூறுவது ஆபத்தில் முடியும் என்றாலும், அவனுடன் செல்கிறாள். அவள் பாட்டியின் வீட்டிற்கு யார் முதலில் செல்கிறார்கள் என்ற பந்தயத்தை முன்வைத்து, தோற்றால் என்ன தருவாய் என அவன் கேட்க, அவன் என்ன கேட்பான் என்று தெரியாத அப்பாவி போல் என்ன வேண்டும் என்று கேட்கும் (அவன் முத்தம் வேண்டுகிறான்) சிறுமி வேண்டுமென்றே பந்தயத்தில் தோற்கிறாள். அவளுக்கு முன் பாட்டி வீட்டிற்கு சென்று அவரைப் புசித்து காத்திருக்கும் இளைஞனைக் கண்டு பயம் கொள்ளாமல் (she knew she was nobody’s meat) அவனை அணைத்துக் கொள்கிறாள். நடுநிசியில் அவன் கைகளுக்கிடையில் அச்சிறுமி உறங்குவதோடு முடியும் கதை எழுப்பும் கேள்விகளும், அதற்கான விடைகளும் பல. “between the paws of the tender wolf” அவள் உறங்குவது அவனை அவள் அடக்கி விட்டால் என்பதைக் குறிக்கிறதா?. ”nobody’s meat‘ என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.
Beauty and the Beast‘/ The Courtship of Mr Lyon கதைகளின் இன்னொரு மறு ஆக்கமான ‘The Tiger Bride‘ கதையிலும் ஆபத்தும் பரவசமும் முயங்குவதைப் பார்க்கிறோம். அருகில் வரும் சிங்க மணமகன், ‘He will lick the skin off me!’ என்று தெரிந்திருந்தும் அதை அனுமதித்து And each stroke of his tongue ripped off skin after successive skin, all the skins of a life in the world, and left behind a nascent patina of shining hairs. My earrings turned back to water and trickled down my shoulders; I shrugged the drops off my beautiful fur“, என்று முடியும் ‘The Tiger’s Bride‘ கதையிலும் சரி, ”The Bloody Chamber‘ புது மணப்பெண் ஆடிகள் சூழ்ந்த அறையில், கணவன் தன்னை நோக்கி வர, (பல) கணவன்(கள் நெருங்குவதாக கற்பனை செய்வதும், அவன் செயல்களை “He in his London tailoring; she, bare as a lamb chop. Most pornographic of all confrontations.” என்று (அவன் குறித்த சில சந்தேகங்களையும்) உணர்ந்தாலும், அதை எதிர்நோக்கும் ஆவலிலும் சரி, தங்களின் பாலியல் விழைவு தரக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அதைக் கம்பீரமாகக் கொண்டாடும் பெண்ணையே பார்க்கிறோம்.
Erl-king’ என்ற நாட்டுப்புற/ தேவதைக் கதையான ‘The Erl-King‘ல் காட்டில் வாழும் – இளம் பெண்களை வசீகரித்து பறவைகளாக மாற்றும் – அமானுஷ்யப் பிறவியுடன் தெரிந்தே சேர்கிறாள். ஆனால் தன் சுயத்தை இழக்க விரும்பாமல் அவனை இறுதியில் கொன்றும் விடுகிறாள்.
ஒரு எளிய நிகழ்வை விவரிக்கும் வாக்கியத்தில் கூட, அதன் ஒரு வார்த்தையை, அது உணர்த்துவதை, உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தை எளிதில் கடந்து விடச் செய்யும் ஆஞ்செலாவின் அடர்த்தியான உரைநடை கவனமான வாசிப்பைக் கோருவது . ‘The Lady of the House of Love‘ கதையில் சீமாட்டியின் கிராமத்தை விவரிக்கும் போது “A cat prowls in a weedy garden; he grins and spits, arches his back, bounces away from an intangible on four fear-stiffened legs.” என்று ஆஞ்செலா எழுதுகிறார். இதில் intangible என்று ‘உணர/ விளக்க முடியாத’ என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைக்கு பதில் unknown, invisible போன்ற வார்த்தைகளைப் பொருத்தி அதே வாக்கியத்தைப் படித்தால் வரும் உணர்வு கண்டிப்பாக வேறு தான். ‘intangible’ என்பது கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.
சிங்க மணமகன் கதைசொல்லியை நெருங்கும் “A tremendous throbbing, as of the engine that makes the earth turn, filled the little room; he had begun to purr. The sweet thunder of this purr shook the old walls, made the shutters batter the windows until they burst apart and let in the white light of the snowy moon. Tiles came crashing down from the roof; I heard them fall into the courtyard far below. The reverberations of his purring rocked the foundations of the house, the walls began to dance. I thought: ‘It will all fall, everything will disintegrate‘, இறுதிக் காட்சியில்tremendous throbbing‘,’ everything will disintegrate‘ போன்றப் பதங்கள் வரப்போகும் ஆபத்தை சுட்டுவதாக மட்டும் தோன்றினாலும் , ‘The Bloody Chamber‘ கதையிலும் புது – அதுவரை பாலுறவு கொள்ளாத – மணப்பெண் தன் கணவனுடன் இரயிலில் அவன் கோட்டைக்குச் செல்லும் போது, தனித்தனியே படுத்திருக்க, அவள் உணர்வுகளோடு, அங்கும் இரயிலின் துடிப்பு/ throbbing குறிப்பிடப்படும்போது, இந்த இயந்திர/அக்றிணை இயக்கங்களையும் கதைசொல்லி பெண்ணின் பாலியல் விழைவுகளின் பிரதிபலிப்பாகவும் கொள்ளலாம் இல்லையா.
The Lady of the House of Love‘ கதையில், இளைஞன் விழிக்கும் போது அவன் சீமாட்டியுடன் வந்த பள்ளியறை பற்றி The shutters, the curtains, even the long-sealed windows of the horrid bedroom were all opened up and light and air streamed in; now you could see how tawdry it all was, how thin and cheap the satin, the catafalque not ebony at all but black-painted paper stretched on struts of wood, as in the theatre. The wind had blown droves of petals from the roses outside into the room and this crimson residue swirled fragrantly about the floor, என்று ஆஞ்செலா விவரிக்கிறார். வெளிச்சம் வீசும் அறை என்பது பொதுவாக மகிழ்வான மனநிலையோடு பொருந்தக்கூடியது. ஆனால் வெளிச்சத்தில் இரத்தக் காட்டேரிகள் அழிந்து விடுவார்கள் என்ற தொன்மத்தின் படி, சீமாட்டியோ தன் உயிருக்கு ஆபத்து அளிக்கக்கூடியது என்பதால் வெளிச்சத்தை முற்றிலும் தவிர்க்கிறார். எனில் வெளிச்சம் உள்நுழைந்தது எப்படி, சீமாட்டி ஏன் அறையில் இல்லை? எதுவும் சொல்லப்படாமலேயே நமக்குப் புரிகிறது. சீமாட்டி இளைஞனுக்கு ஊறு விளைவிக்க விரும்பாமல், தன்னை அழித்துக் கொள்ளும் விதமாக வெளிச்சத்தை உள்ளே அனுமதித்திருப்பார். இப்போது வெளிச்சம் புத்துணர்வூட்டுவதாக இல்லாமல், துயரத்தின்/சீமாட்டியின் காதலின் (கரிசனத்தின்) சுமையைக் கொண்டதாக மாறுகிறது.
தேவதைக் கதைகளை மறு ஆக்கம் செய்யும் போது, அதை பழங்காலத்திலேயே அமைப்பதோ அல்லது நவீன காலத்தில் அமைப்பதோ நடக்கிறது. இந்தக் கதைகளின் காலகட்டம் பொதுவாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 19ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி என சில கதைகளில் யூகிக்க முடிந்தாலும், முன்பொரு காலத்தில் நடந்தவை என்றோ, தற்காலத்தில் நடப்பவை (கார், இரயில் பற்றிய குறிப்புகள் ஓரிரு கதைகளில் உள்ளன ) என்றோ ஆஞ்செலா வெளிப்படையாக சொல்வதில்லை என்பதால் இவற்றில் காலம் குறித்த துல்லியமான ‘பிரக்ஞை’ இல்லை. அதே நேரம், ‘The Bloody Chamber’ கதையில் வருவது போல் ஒரு கோட்டையை (castle)
Sea; sand; a sky that melts into the sea–a landscape of misty pastels with a look about it of being continuously on the point of melting
And, ah! his castle. The faery solitude of the place; with its turrets of misty blue,
………….his castle that lay on the very bosom of the sea with seabirds mewing about its attics,
……, evanescent departures of the ocean, cut off by the tide from land for half a day …
that castle, at home neither on the land nor on the water, a mysterious, amphibious place, contravening the materiality of both earth and the waves, with the melancholy of a mermaiden who perches on her rock and waits, endlessly, for a lover who had drowned far away, long ago. That lovely, sad, sea-siren of a place!
என்று விவரித்து கதைகளின் புறச் சூழலை அவர் உருவாக்கும் போது, காலம் குறித்த பிரக்ஞை முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எளிதில் பிரித்தறிய முடியாதப்படி பழங்காலமும்- நிகழ்காலமும் தொட்டுச் செல்லும் வினோத காலத்திற்குள் வாசகன் எளிதில் நுழைவதோடு, இயல்பாக தன்னை அதில் பொருத்திக் கொள்ள முடிகிறது.
ஓரிரு படிமங்கள் பல கதைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன. நாவால் தோலை/ உடலை வருடுவது/ சுவைப்பது அப்படிப்பட்ட ஒன்று. ‘Wolf-Alice’ கதையில் காயமடைந்த ட்யூக்கின் (Duke) உடலை நாவால் வருடி ஆற்றுப்படுத்தினால், ‘The Tiger Bride‘ கதையில் அது காமத்தில் உச்சகட்டமாக உள்ளது. பெண்ணின் மடி மீது ஆண்/ மிருகம் தலைவைப்பது காதலின்/ சரணடைவதின், இணைவின் அடையாளமாக சில கதைகளின் இருந்தால் (The Courtship of Mr LyonThe Company of Wolves), ‘The Erl-King‘ கதையில், கதைசொல்லி தன்னை மயக்கி பறவையாக மாற்ற நினைப்பவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வழி செய்கிறது.
ஆடிகளில் விழாத பிம்பங்களோடு, ஆடிகளை நிறைத்துப் பெருகும் பிம்பங்களும் இந்தக் கதைகளில் உள்ளன. ‘Wolf-Alice‘ கதையில் வரும் பதின்பருவப் பெண் ஆடியில் தன் பிம்பத்தைப் பார்த்து முதலில் திடுக்கிடுவதையும் , அப்பிம்பத்தைத் தன் தோழியாக பிறகு எண்ணுவதையும், கதையின் தலைப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பது சில புரிதல்களைத் தரக்கூடியது.
அடர் சிவப்பு ரோஜாக்கள், அவற்றின் முள் பதிந்து வெண்பனியில் சிந்தும் உதிரம், வாடிய செடிகளுக்கிடையே பூத்திருக்கும் ஒற்றை வெள்ளை ரோஜா, காற்றில் எங்கும் நிறைந்திருக்கும் -மனதை மயக்கும் – ரோஜாக்களின் நறுமணம் என ரோஜாக்கள் பல கதைகளில் (தன்னை அழித்துக்கொள்ளும் சீமாட்டி இளைஞனுக்கு விட்டுச் செல்வதும் ஒரு ரோஜா மலர் தான்) குறிப்பிடப்படுவது, தேவதைக் கதைகளில் பல இடங்களில் தென்படும் ரோஜாக்களுக்கு ஆஞ்செலா செலுத்தும் அஞ்சலி என்பதோடு அவை பாரம்பர்ய தேவதைக் கதைகளின் உணர்வு நிலையை இந்த நவீன கதைகளிலும் உருவாக்குகின்றன.
பல முறை பார்த்துப் பழகிய ஓவியத்தை புதிய கோணத்தில் பார்க்கும் போது அதுவரை கவனிக்கத் தவறியவை தென்படுவது போல, ஏற்கனவே அறிந்திருந்தக் கதைகளைப் பற்றிய – பெண்மை/ பெண்மையின் பாலியல் விழைவு ஆணை அரவணைக்கும் அதே நேரம் அச்சுறுத்தும் ஆற்றலும் கொண்டது – என்ற கோணத்தை (இதில் ஆணும் பெண் போலவே விருப்பு/ பயம் என்ற இரட்டை நிலையில் உள்ளான்) , தேவதைக் கதைகளின் இயல்பான கனவுத் தன்மையை காவு கொடுக்காத உரைநடையோடு, நவீன தேவதைகள் ஆளும் உலகை உருவாக்குவதால் இந்தத் தொகுதி இத்தகைய மறு ஆக்க கதைகளில் தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது.
பின்குறிப்பு:
மூலப் பிரதியில் செய்யப்பட்ட மாற்றங்களால் சற்றே நீர்த்துப் போன தேவதைக் கதைகளின் பிரதிகளே அதிகம் படிக்கப்படுகின்றன. (Frog Prince கதை ஒரு உதாரணம்).Grimm சகோதரர்களின் தொகுக்கப்பட்ட தேவதைக் மூல கதைகளுக்கு அணுக்கமானவை என்று இரு தொகுப்புக்கள் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.
The Complete Grimm’s Fairy Tales – Pantheon Edition.
Jack Zipes தொகுத்து சென்ற ஆண்டு வெளிவந்த The Original Folk and Fairy Tales of the Brothers Grimm:The Complete First Edition, இதுவரை வெளிவந்தவற்றுள், மூலத் தொகுப்பை சிதைக்காத, அதற்கு மிக நெருக்கமான தொகுப்பாக கருதப்படுகிறது.
Related Link(s)
http://wordsbeyondborders.blogspot.com/2015/02/1-modern-fairy-tales.html

Monday, November 16, 2015

Ian McEwan – On Chesil Beach

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/11/04/on-chesil-beach/)
---------------
திருமணம் முடித்த கையோடு தேனிலவு கொண்டாட கடலோர விடுதிக்கு வந்திருக்கும் இளம் தம்பதியரான எட்வர்ட் (Edward)/ ப்ளாரன்ஸ் (Florence) இரவு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
தேனிலவு அறையின் நிசப்தம், உணவைப் பரிமாறும் இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருப்பதால் தரையில் உண்டாகும் கீச்சிடும் சப்தம், அந்த இளைஞர்கள் எதாவது நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கிறார்களா என்ற எட்வர்ட்டின் கவனித்தல், உணவிற்குப் பின் கடற்கரைக்கு நடை செல்ல வேண்டும் என்ற அப்போதைய திட்டம் முதல், அவர்கள் மண வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் – இசைத்துறையில் ப்ளாரன்ஸ் செய்ய வேண்டியவை, எட்வர்ட்டின் பணி, இருவரின் நண்பர்கள் – என்பது வரை போதையேற்றுகிற பல கனவுகளை அவர்கள் – “heaped up before them in the misty future” – கொண்டுள்ளார்கள்.
ஆனால் அனைத்தையும் விட அவர்கள் இருக்கும் அறையிலிருந்து, அவர்கள் பார்வையின் ஓரத்தில் தெரியும் மென்மையான, தூய வெள்ளை நிறத்திலான விரிப்பைக் கொண்ட படுக்கை தான் அவர்களை மனதை முழுதும் ஆக்கிரமித்து, அவர்கள் வருங்காலத்தை மூடுபனியால் போர்த்திருக்கிறது. திருமண தினத்தின் உற்சாகத்தை சற்றே வடியச் செய்யும், அன்றைய இரவைக் குறித்த இயல்பான பதற்றம் அல்ல இது என்பதும், அவர்கள் நுழைய உள்ள மூடுபனியில் ஒருவரை ஒருவர் தவற விட்டு, பாதை மாறி, வருங்காலத்தை இழக்கக் கூடும் என்பதும் விரைவில் வாசகனுக்கு சில விவரிப்புக்கள் மூலம் புரியவருகிறது (Sex with Edward could not be the summation of her joy, but was the price she must pay for it, என்று ப்ளாரன்ஸ் எண்ணுகிறாள்)
திரும்பி வர முடியாத புள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும் இந்தத் தம்பதியர் வாழ்வின் ஓர் இரவை, அவ்விரவின் சம்பவங்களோடு, கடந்த காலத்தையும் மெக்கீவன் கலக்கிறார். இது ஒரு சிறு/நெடுங்கதையாக முடித்திருக்கக் கூடியதை நாவலாக நீட்டிப்பதற்கு செய்யும் யுத்தி மட்டுமே அல்ல.
1960களின் ஆரம்பத்தில், உலக அரங்கில் இங்கிலாந்து தன் இடத்தை இழந்து கொண்டிருப்பதை, அப்பேரரசின் சூரியன் அஸ்தமனமாகத் தொடங்குவதை நம்ப/ புரிந்து கொள்ள முடியாமல் கவனித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போரில் போரிட்ட மத்திய வயதுடைவர்கள், இவர்களுக்கு நேர்மாறாக அப்போது குழந்தைகளாக இருந்து இப்போது 20களில் இருப்பவர்களின் அணுசக்தி எதிர்ப்பு போன்ற கொள்கைகள் (இங்கிலாந்தைப் பொருத்தவரை) ஒரு யுகத்தின் முடிவிற்கு) சாட்சியாக இருக்கிறாகள்.
ப்ளாரன்ஸ் /எட்வர்ட்டின் சந்திப்பு, குடும்பப் பின்னணி, இருவருக்குமிடையே உள்ள வித்தியாசங்கள் ( ப்ளாரன்ஸ் மேற்கத்திய செவ்வியல் இசை பயின்றவர்/ நிகழ்த்துபவர், எட்வர்ட் ‘ராக்’ இசை கேட்பவர்) போன்றவற்றின் சித்தரிப்புக்கள் அவர்கள் தங்கள் திருமண இரவன்று வந்தடைந்துள்ள இடத்திற்கான பாதையை விளக்குகிறது.
60களின் ஆரம்பம் என்பதால் பாலியல் குறித்த உரையாடல்கள் சாத்தியம் இல்லை என்று ஒற்றைப்படையாக இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாது. இது குறித்த உரையாடல்கள் எப்போதுமே எளிமையானவை அல்ல இல்லையா? மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள்/ எதிர்பார்ப்புக்கள் தம்பதியரிடையே பிரச்சனைக்கு காரணமாகிறது. ப்ளாரன்ஸ் நான்கு பேர் கொண்ட மேற்கத்திய செவ்வியல் இசையை நிகழ்த்தும் குழுவின் அறிவிக்கப்படாத தலைவியாக இருக்கிறாள், அந்த ஆளுமை அவளுக்கு இயல்பாக உள்ளது. அதை கவனிக்கும் எட்வர்ட்டால், அத்தகைய ஆளுமை உடைய பெண் பாலுறவு குறித்த வெறுப்பு கொண்டிருப்பாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், இருவரும் நெருங்கும் கணங்களில் அவளின் தயக்கத்தை/ விலகலை நாணமாகவே கருதி, திருமணத்திற்குப் பின் சரியாகி விடும் என்று நம்புகிறான். இறுதி வரை, இத்தகையத் தவறானப் புரிதல்கள் நீடிக்கின்றன. திருமண இரவன்று அவளை முத்தமிடும் போது, ப்ளாரன்ஸ் குமட்டல் ஒலி எழுப்ப அப்போதும் கூட அதை அவளின் எழுச்சியின் வெளிப்பாடாகவே தவறாகப் புரிந்து கொள்கிறான்.
இருவரின் கூச்ச உணர்வோடு, திருமணம்/ உடலுறவு, பாலிய இயங்குவியல் குறித்த சமூக கற்பிதங்களும் அவர்களைத் தங்கள் தயக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதிலிருந்து தடுக்கின்றன. திருமணத்திற்குப் பின் ஆணுக்கு உரியதான பெண் உடல் என்று பதிந்துள்ளதால், இறுதி வரை ப்ளாரன்ஸ் தன்னிடம் ஏதோ பெரிய குறைபாடு உள்ளதென்றும், அனைத்துமே தன்னுடைய தவறு தான் என்றுமே எண்ணுகிறாள். அதுவே அது குறித்து பேச மேலும் தடையாக உள்ளது. திருமண நிச்சயத்திற்குப் பின்னான, திருமணம் வரையிலான பல மாத இடைவெளியில், உடல் சார்ந்த நெருக்கத்தை ப்ளாரன்ஸ் தவிர்ப்பது அவனைத் துன்புறுத்தினாலும், அதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு அவனுள் நேசம் உள்ளது. உடலுக்கு உரியவன் என்று சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும், அதற்கான தகுதி தன்னிடம் உள்ளதா என்ற (இயல்பான) சந்தேகமும் எட்வர்ட்டை ப்ளாரன்ஸ்ஸின் தயக்கத்தை அப்போதைக்கு கடந்து செல்ல வைக்கிறது, அதுவே இறுதியில் வினையாகி விடுகிறது.
நேரடியாக சொல்லாவிட்டாலும், ப்ளாரன்ஸ் சிறுவயதில் மிக நெருங்கிய உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதுவே அவளின் வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்பதற்கான சில மங்கலான தடயங்களை நாவலெங்கும் மெக்கீவன் விட்டுச் செல்கிறார். ப்ளாரன்ஸ்ஸின் உணர்வுகளோடு இது சரியாகப் பொருந்தினாலும், அவள் பாத்திரத்திற்கு மேலும் அழுத்தம் கூட்ட திணிக்கப்பட்ட தகவலாகவும் இது உள்ளது. யூகமாகக் கூட எதையும் சுட்டாமல் பாலியல் குறித்த தேவையற்ற கற்பிதங்கள் கொண்ட வெகுளிப் (sexually naive) பெண்ணாக மட்டுமே அவரைச் சித்தரித்து – நாவலின் ஓர் இடத்தில், புதுமணப் பெண்களுக்கான கையேடு ஒன்றைப் வாசிக்கும் ப்ளாரன்ஸ் அதில் வரும் ‘penetration’ என்ற வார்த்தையை கத்தியால் பிளக்கப்படும் வலியாக உருவகிக்கிறார்- இருந்தால் அப்பாத்திரத்திற்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கக் கூடும்.
சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை என்றோ அதன் விளைவுகள் வாழ்க்கை முழுதும் அவர்களைத் தொடர்வதில்லை வாட்டுவதில்லை என்றோ இங்கு சொல்ல வரவில்லை, அப்படி எந்த துயர நிகழ்வையும் எதிர்கொள்ளாத எத்தனையோ பேருக்கும் உள்ள பாலியல் குறித்த குழப்பங்களை முன்வைத்து இந்தப் பாத்திரத்தை உருவாக்கி இருக்கலாம். இரண்டிற்குமே சாத்தியங்களை நாவலில் வைத்துள்ளதால் தான் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவாக சொல்லாமல் வாசகனின் யூகத்திற்கு மெக்கீவன் விட்டிருக்கலாம். ப்ளாரன்ஸ்ஸின் பால்யம் குறித்த நினைவுகளுமே தவறான புரிதல்களால் உருவாகி இருக்கலாம் என்ற மூன்றாம் கோணத்தையும் கருத்தில் கொள்ளலாம். David Foster Wallanceன் ‘Signifying Nothing’ சிறுகதையை இங்கு அதன் கதைசொல்லியின் மைய உணர்வுக்காக ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு வேளை இந்தக் கதைசொல்லி தன் நினைவுகளை எதிர்கொண்ட விதத்தில் ப்ளாரன்ஸும் செய்திருந்தால்?
நாவல் முழுவதும் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என வேறு பாதைகளை இந்தப் பாத்திரங்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய பலச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றாலும் பெரும்பாலும் எதுவும் செய்யாமல், மெக்கீவன் சொல்வது போல்,- This is how the entire course of a life can be changed: by doing nothing– வீணடிக்கிறார்கள். நகை முரணாக திருமண இரவன்று, திட்டமிட்டப்படி கடற்கரைக்குச் செல்லாமல், தன் வெறுப்பை வெல்ல ப்ளாரன்ஸ் தான் அருவருக்கும் ஒன்றை நோக்கி எடுத்துவைக்கும் அடி ஒன்றே, அதுவரை அவர்களிடையே இருந்த திரையை கிழிக்கிறது. ஒரு கோணத்தில் அந்நிகழ்வு தேவையானது தான் என்றாலும், வெளிக்கொணர்ந்த சூழல் பொருத்தமாக இல்லாததால் நெருக்கடியை உருவாக்குகிறது
நாவல் முழுதும் எந்தப் பூச்சுக்ளுமற்ற உரைநடையை கையாண்டிருக்கும் மெக்கீவன், தம்பதியரின் முதல் உடலுறவு முயற்சியையும், அவ்வாறே சில வரிகளில் நேரடியாகச் சொல்கிறார். ஆனால் பதட்டத்தில் ப்ளாரன்ஸ் உடலெங்கும் எட்வர்ட்டின் விந்து சிதறி உறைய ஆரம்பிக்க, தீயை அள்ளிக் கொட்டியது போல் ப்ளாரன்ஸ் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த வெறுப்பின் வெளிப்பாடாக செய்யும் செயல், (ப்ளாரன்ஸ் மீது தவறில்லை என்றாலும்) எட்வர்ட் மனதில் ஆறா வடுவை உருவாக்குகிறது.
அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணரும் எட்வர்ட், தன்னையே எரித்துக்கொள்ளும் கோபமும் (அவனுக்குள் சில சமயம் உருவாகும் இத்தகைய அதீதக் கோபத்தைப் பற்றியக் குறிப்புக்களை முன்பே நாவலில் மெக்கீவன் தந்துவிடுகிறார்) , அதை அணைக்க முயலும் காதலுமாக அறையை விட்டு நீங்கி கடற்கரைக்குச் சென்றுள்ள ப்ளாரன்ஸ்ஸைத் தேடிச் செல்கிறான். தவறு தன் மீது தான் என்றே இப்போதும் எண்ணும் ப்ளாரன்ஸ் தற்காப்புக்காக, எட்வர்ட் மீது முதல்முறையாக மனதில் குற்றம் சுமத்துகிறாள்.வெறுப்பு/ நேசம் என்ற இரு துருவ உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும் இருவரின் உரையாடல் எதை சாதித்திருக்கக் கூடும்? தங்கள் உறவைக் காப்பதாக எண்ணி ப்ளாரன்ஸ் சொல்லும் ஒரு ஆலோசனை அவர்கள் வாழ்க்கை பாதையை முற்றிலும் மாற்றிப் போடுகிறது. “All she had needed was the certainty of his love, and his reassurance that there was no hurry when a lifetime lay ahead of them,” என்று ஏங்கும் ப்ளாரன்ஸ்ஸை எட்வர்ட் எப்படி மீட்டிருக்கக் கூடும்?
நாவலின் ஆரம்பத்தில், அவர்களின் திருமணம் குறித்து சொல்லும் போது எட்வர்ட்டின் தாய் “… had not significantly misbehaved, or completely forgotten the purpose of the occasion,” என்று சொல்லப்படுவது புதிராக உள்ளது. அவ்வப்போது வரும் எட்வர்ட் குடும்பம் குறித்த சித்தரிப்புக்களும் இந்தப் புதிரை அதிகமாக்குகின்றன. எட்வர்டுக்கு ஐந்து வயதும் அவன் இரட்டை சகோதரிகள் கைக்குழந்தைகளாகவும் இருக்கும் போது, அவன் தாய்க்கு ஏற்படும் விபத்தால் மூளை பாதிப்படைகிறது. கலங்கலான உணர்வுகள்/ நினைவுகள் மட்டுமே உள்ள அவரை கவனித்துக் கொள்வதோடு, மூன்று குழந்தைகளையும் எட்வர்ட்டின் தந்தை வளர்க்கிறார். தாய் வித்தியாசமானவர் என்று உணர்ந்தாலும், என்னவென்று சரியாகத் தெரியாத எட்வர்ட்டிடம் (eccentric என்றே அவரும் சரி மற்றவர்களும் சரி நினைத்துக்கொள்கிறார்கள்) அவனுக்கு 14 வயதானப் போது அவன் தந்தை அந்த விபத்தைப் பற்றிக் கூறி “What I’ve said changes nothing, absolutely nothing,..” என்று முடிக்கிறார். அப்போது கூட தாயை அவன் அணுகும் கோணத்தில் எதுவும் மாற்றமிருக்க கூடாது என செய்வது செய்வது அவர் மனைவி மேல் உள்ள காதல் மற்றும் திருமண உறவு குறித்து தனக்குள்ள கடமை என அவர் உணரச் செய்யும் பொறுமை. எட்வர்ட் மற்றும் ப்ளாரன்ஸ்ஸிடையே ஆழ்ந்த நேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சிகள் நாவல் முழுதும் உள்ளன. பொறுமையும் ஓரளவுக்கு உள்ளது என்பதை நாவலில் காண்கிறோம். ஆனால் கொந்தளிப்பான நேரத்தில் அதை அணைக்கும் பொறுமை?
அந்தப் பொறுமை மட்டுமிருந்திருந்தால் அவர்கள் காதல் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொண்டு வென்றிருக்கக் கூடும். ஆனால் கணித சூத்திரம் போல் வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்தால் அந்தியில், கடற்கரையில் சரிந்த மரத்தின் மீது தனிமையில் சாய்ந்திருக்கும், பிறகு விவாதம் முற்றி, சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து, நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில்
… certain in her distress that she was about to lose him, she had never loved him more, or more hopelessly, and that the sound of his voice would have been a deliverance, and she would have turned back….
என்று பெருங்காதலோடு, தன்னை ஆற்றுப்படுத்தும் ஒரு இன்சொல்லுக்காக ஏங்கி அந்தக் காதலை விட்டுப் பிரிந்த நேசத்திற்குரிய இளம் பெண்ணிற்கும் , அவள் விலகிச் செல்லச் செல்ல சிறு புள்ளியாகி, அந்தியின் ஒளியோடு கலப்பதை எதுவும் செய்யாமல்/செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்க்குரிய இளைஞனுக்கும்
இலக்கியத்தில் ஏது இடம்?

Monday, October 26, 2015

Colm Toibin – The Blackwater Lightship – கதைசொல்லலின் சில நுட்பங்கள்

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/10/18/the-blackwater-lightship/)
----------------------
கலம் டுபீனின் (Colm Toibin) ‘The Blackwater Lightship‘ நாவலில் இரு சம்பவங்கள். ஒன்று. தாய் லில்லியுடன் (Lily) பல வருடங்களாக பிணக்கு கொண்டுள்ள ஹெலனிடம் (Helen) லில்லி அன்னியோன்யமான தொனியில் பேசும்போது, “It brought anxiety with it as much as reassurance” என்று உணர்கிறார். இரண்டு- ஹெலனின் வீட்டில் விருந்து நடக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த நண்பர்களும் நண்பர்களின் நண்பர்கள் என தெரியாதவர்கள் பலரும் வருகின்றனர். அதில் ஓர் ஆண் ஹெலனுடன் சற்றே நெருக்கமான/ கிண்டலான தொனியில் பேசுகிறார். சிறிய உரையாடலான இது எல்லைமீறிச் செல்வதில்லை. அடுத்த நாள், அந்த ஆண் தன் இளைய சகோதரன் டெக்லனுக்கு தெரிந்தவன் என்றும் தற்பால்விழைவு கொண்டவன் என்றும் ஹெலனுக்கு தெரியவரும்போது அவள் எரிச்சலடைகிறாள்.
இந்த இரு சம்பவங்களும் சாதாரணமானவை போன்று தோற்றமளித்தாலும் இவற்றுக்குச் சிறிது நேரம் ஒதுக்குவோம். முதல் சம்பவத்தில் தாயின் எதிர்பாராத அன்னியோன்யம், ஹெலனுக்கு ஆச்சரியமளிக்கக்கூடும். ஆனால் ஏன் பதட்டப்படுத்த வேண்டும்? இதற்கான காரணம் நாவலில் பின்னொரு இடத்தில், வேறொரு சூழலில் இந்தச் சம்பவத்திற்கு தொடர்பில்லாத நிகழ்வில் தெரியக்கூடும், அது ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் உள்ள பிணக்கு ஏன் என்ற கேள்விக்கான விடையாகவும் இருக்கக்கூடும்.
இரண்டாவது சம்பவத்தில் ஹெலன் கோபப்படுவது அந்த ஆண், தான் அவளின் சகோதரனுக்கு தெரிந்தவன் என்பதைச் சொல்லாததால் மட்டும்தானா? ஒரு இனிய flirting நினைவு அவன் தற்பால்விழைவு கொண்டவன் என்று தெரிந்ததும் மாற்றமடைந்து, தன்னை அவன் கேலி செய்ததாக எண்ணுவதால்கூட இருக்கலாம் (ஹெலனுக்கு அந்த ஆண் மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை, அவள் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாகவே உள்ளது, கணவனை மிகவும் நேசிக்கிறாள். அந்த ஆணுடனான உரையாடலை ‘compliment’ஆகவே அவள் முதலில் எடுத்துக் கொள்கிறாள்)
முதல் சம்பவம் நாவலின் முக்கிய கேள்வியாக உருப்பெருவதை பின்னர் உணர்கிறோம். இரண்டாம் சம்பவம் அதனைத் தாண்டி வேறெந்த தாக்கத்தையும் கொண்டிராவிட்டாலும் அதற்குப் பின்னுள்ள அக உணர்வுகள் அத்தனை எளிமையாக விளக்கப்படக்கூடியவை அல்ல. “I’m against story,” என்று ஒரு பேட்டியில் டுபின் சொல்வதற்கேற்ப, முதல் பார்வையில் எளிமையானவையாக தோற்றமளிக்கும் பல புறவய நிகழ்வுகள்/ அவற்றின் பின்னாலுள்ள அகஉணர்வுகள் மற்றும் அந்நிகழ்வுகளால் பாத்திரங்களின் அகத்தில் உண்டாகும் மாற்றங்கள்/ உணர்ச்சிகளின் திரட்சியாக இந்த நாவல் உள்ளது.
தலைமை ஆசிரியை பொறுப்பில் இருக்கும் ஹெலனுக்கு அவரின் தாய் மற்றும் பாட்டி டோராவுடன் (Dora) சுமுகமான உறவில்லை. பாட்டியையாவது அவ்வப்போது அவர் சந்தித்தாலும் தாயை முற்றிலும் ஒதுக்குகிறார் (அல்லது தாயும் அவரிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). ஹெலனின் இளைய சகோதரன் டெக்லன் (Declan) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷயம் ஹெலனுக்குத் தெரியவருகிறது. பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்க ஆசைப்படுகிறாள் ஹெலன். இதன் பொருட்டு அவர் வீட்டில் பாட்டி, தாய், மகள் மற்றும் மகன் என்று மூன்று தலைமுறை ஆட்களும் டெக்லனின் இரு நண்பர்களும் சில நாட்கள் தங்குவதை விவரிக்கும் நாவலின் களம் பரிச்சயமான ஒன்றுதான்.
பிணக்கு கொண்ட குடும்பங்கள் ஏதோ காரணத்திற்காக ஒன்று கூடுவதை ‘Douglas Coupland’ (‘All families are psychotic’) போல இருண்மையான நகைச்சுவையோடு சொல்வது அல்லது ‘Anne Enright’ போல நேரடித்தன்மை கொண்ட நடை என பல வகைகளில் சொல்லப்படுகிறது. மேலே பார்த்த பாணிகளிலிருந்து மாறுபட்ட உரைநடை stylist டுபீன். தான் விவரிப்பது தன் பாத்திரங்களை distract செய்து விடும் என்று அஞ்சுபவர் போல, வாசகனுக்கு மட்டும் (அவன் கூர்ந்து கவனித்தால்) கேட்கும் தொனியில் அவரது நடை உள்ளது.
ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் நடக்கும் ஓர் உரையாடலில் தன்னைக் குறித்து லில்லி எப்போதுமே திருப்தியுறவில்லை என்று ஹெலனும் அதை மறுத்து லில்லியும் வழக்கம் போல் வாதத்தில் இறங்க
‘Helen, I’ve always accepted you,’ her mother said.
‘That’s a lovely word for it, thanks,’ Helen said.
என்று சொல்வதில் ‘accepted’ என்ற வார்த்தை ஒரு மகளுக்கு ஏற்படுத்தக்கூடிய காயம், மிகுந்த வலி தரக்கூடியது இல்லையா (லில்லி அதை நேர்மறையான அர்த்தத்திலேயே சொல்லி இருந்தாலும்)?
டெக்லன் மருத்துவமனையில் உள்ளான் என்று மட்டும் கூறி பால் என்ற அவனின் நண்பன், ஹெலனை அங்கு அழைத்துச் செல்ல, அவன் பின்னால் செல்லும் ஹெலன் மிகப் பெரிய மருத்துவமனை என்றோ, கால் வலிக்க நடக்க வேண்டியுள்ளது என்றோ யோசிப்பது போல் விவரிக்காமல், “..did not know at what point he would turn and open a door and she would find Declan” என்று எழுதுகிறார் டுபீன். ‘did not know at what point he would turn‘ என்பதில் நடையின் நீளமும், ‘open a door and she would find Declan‘ என்பதில் ஹெலனின் பயம்/ பதற்றமும் தெரிகிறது. ஏன் இங்கு கதவு திறக்கப்படுவதைச் சுட்ட வேண்டும் என்றால், மூடிய கதவிற்கு பின்னால் என்ன காத்திருக்கிறது என்ற பயம் பொதுவான ஒன்றுதானே? (மூன்று பூட்டிய கதவுகளில் ஒன்றினுள் மட்டும் கொடிய மிருகம் உள்ளது, அதைத் தவிர்க்க வேண்டும்- போன்ற போட்டிகள் பல மாயாஜாலக் கதைகளில் உண்டு) . ‘Pandora’s box’ஐ திறப்பது போன்று அவன் அறையைத் திறந்தால் என்ன தெரியவருமோ?
உரைநடை stylist என்று சொல்லும் போது அது எதிர்மறையான விமர்சனங்களுக்கும் இட்டுச் செல்லக் கூடும். ஹெலன் தன் தந்தையை இழந்த பின் பாட்டியின் வீட்டிற்கு வரும் போது கடற்கரைக்குச் சென்று
“imagined the sea, angry and inexorable, moving slowly towards the town, everything dissolving, slowly disappearing, the dead being washed out of their graces, houses crumbling and falling, cards being dragged out into the unruly ocean until there was nothing any more but this vast chaos”
என்று கற்பனை செய்வதாக விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது, 11 வயது சிறுமி இப்படி எண்ணக்கூடுமா என்ற கேள்வி எழலாம். அதைத் தாண்டி, நடை/ style என்பதை எழுத்தில் முக்கிய அம்சமாக ஏற்றுக்கொண்டு பார்க்கும் போது, ‘chaos’ பற்றி பேசும் இந்தப் பத்தியில் உள்ள அமைதியையும், அதனுள் பொதிந்திருக்கும் பயங்கரத்தையும், தந்தையை இழந்த சிறுமியின் இயலாமையால் விளையும் கோபத்தையும் அது உருவாக்கும் மன உளைச்சலையும் உணர முடியும்.
“I would take realism as something where the sentences provide information, whereas here, you’re being led towards feeling with as much subtlety as I can manage. It’s closer to some sort of poetic thing, but it’s buried.”
என்று டுபீன் சொல்கிறார். நாவலில் கடலைப் பார்த்தமர்ந்தபடி ஹெலனின் நினைவுகள் விரிவது பல முறை வரும் நிகழ்வாக (motif) உள்ளது. ஒரு முறை கோபம், இன்னொரு முறை ஆற்றாமை, வேறொரு முறை வெறுமை-
“Imaginings and resonances and pain and small longings and prejudices. They mean nothing against the resolute hardness of the sea. They meant less than the marl and the mud and the dry clay of the cliff that were eaten away by the weather, washed away by the sea. It was not just that they would fade: they hardly existed, they did not matter, they would have no impact on this cold dawn, this deserted remote seascape where the water shone in the early light and shocked her with its sullen beauty. It might have been better, she felt, if there had never been people, if this turning of the world, and the glistening sea, and the morning breeze happened without witnesses, without anyone feeling, or remembering, or dying, or trying to love. She stood at the edge of the cliff until the sun came out from behind the black rainclouds”
மேலே உள்ளது போல் நிச்சலமான வெறுமை என அவர் உணர்வுகளின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் கறாரான ‘realism’ இல்லை, ஆனால் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் அவை நம்மைக் கொண்டு செல்லும் இடம் ஹெலனைப் பற்றிய புரிதலுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
கதைக்கு எதிரானவர் என்று டுபீன் சொல்லிக் கொண்டாலும், அவரின் நடை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், அவற்றில் உள்ள nuances, சம்பவங்களை இணைக்கும் சரடாகி ‘கதையுள்ள/ கதை நிகழும்’ உலகை உருவாக்குவதைக் காண்பதோடு (ஹெலன் கடலைப் பார்த்தபடி இருக்கும் சம்பவங்கள் ஒரு உதாரணம்). பாத்திரங்களும் நாம் கவனித்திராத கணத்தில் உயிர் கொண்டெழுவதை உணர்கிறோம். சம்பவங்களை அடுக்குவதிலும் ஒரு நடையை டுபீன் பின்பற்றுகிறார்.
வார்த்தைகளால் காயப்படுத்தி, அடுத்த கணமே அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் அதே சுழற்சியைத் தொடங்குவதாக இருக்கும் பாட்டி/ மகள்/ பேத்தி உறவை, அவ்வுறவில் அத்தகைய விரிசல் விழக் காரணம் என்ன, அது முற்றிலும் உடையாமல் காக்கும் பிணைப்பு என்ன என்பதை டுபீன் நேர்க்கோட்டில் சொல்வதில்லை. ஒரு சம்பவம், அதனால் ஒரு பாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்காயம் முதலில் சொல்லப்படுகிறது. பிறகு எத்தேச்சையாக இன்னொரு பாத்திரம் அந்தச் சம்பவம் பற்றி ஏதோ சொல்ல, வாசகனுக்கு புரிதல் ஏற்படுவது போல் தோன்றுகிறது. சில இடங்களில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. நாவலில் அதன் இடம் என்ன என்று அப்போது புரிவதில்லை. பிறகு அதே சம்பவத்தின் நீட்சி சொல்லப்படும்போது அது முழுமையடைகிறது.
உரைநடையின் நுட்பங்கள் மட்டுமின்றி, நாவலின் கட்டமைப்பும் வாசகனிடம் ஒருமுகப்படுத்திய வாசிப்பைக் கோருகின்றன. டுபீன் நேரடியாக எதையும் சொல்வதில்லை என்பதால், அத்தகைய வாசிப்பே வாசகனுக்குள் நாவலின் உலகை உருவாக்கும். அல்லது கவனமாக வாசிக்காமல் போனால், விரைந்து கடந்து விடும் ஒரு வரியோ/ பத்தியோ/ சிறு நிகழ்வோ பின்னர் நடப்பவற்றை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் செய்துவிடக்கூடும்.
ஹெலனுக்கு அவள் தாயுடன் ஒத்துப்போகவில்லை, லில்லிக்கு அவள் மகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் இதை வெறும் தலைமுறை இடைவெளி சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. டெக்லன் தற்பால்விழைவாளன் என்பது குறித்து ஹெலனுக்கு எந்த எதிர்மறை கருத்தும் இல்லை. பாட்டி டோராவோ, அதை ஆமோதிக்காவிட்டாலும், பெரிதாக எதிர்வினை புரிவதில்லை, அவன் நண்பர்களுடன் நட்பாகவும் இருக்கிறார். லில்லி மட்டுமே அவன் பால்விழைவை, அவன் நண்பர்களை சகித்துக்கொள்ளக்கூட முடியாமல் இருக்கிறார்.
கார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும், தனியாக வசிப்பதால் தற்காப்புக்கு கத்தி வைத்திருக்கும் பாட்டி டோரா எளிதில் வாசகனை ஈர்ப்பார். நாவல் ஹெலனின் பார்வையிலேயே நகர்வதால் பாசம்/ வெறுப்பு இவற்றுக்கிடையே ஊசலாடும் அவரின் முரண்பாடான உணர்வுகள் குறித்து வாசகனுக்குப் பிடி கிட்டுகிறது. எனவே ஹெலன் பாட்டி போல் வாசகனை ஈர்க்காவிட்டாலும், அவருடன் empathize செய்யலாம். நேர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம் இல்லாத பாத்திரம் லில்லி. ஹெலனின் கண்ணின் வழியே நாம் காணும் லில்லி இறுகிய மனம் உடையவராக மட்டுமே முதலில் தெரிகிறார். ஆனால் இளம் வயதில் கணவனை இழந்து, பிள்ளைகளை வளர்த்து, கணினி பயிற்சி/ விற்பனை வியாபாரத்தில் வெற்றி பெற்றுள்ள அவருக்குள் உள்ள துயரைப் பற்றிய சமிக்ஞைகளுக்கும் நாவலில் உரிய இடமளிக்கிறார் டுபீன்.
டெக்லனின் உடல்நிலை மூன்று பெண்களையும் சில நாட்களுக்கு இணைப்பதற்கே அதிகம் பயன்படுகிறது. அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பைச் சுட்டும் பழைய? கணங்கள் நாவலில் உள்ளன, அதற்கான பின்னணி பற்றி அதிகம் சொல்லப்படுவதில்லை. மூவரில் பாலின் வாழ்க்கை பற்றி மட்டுமே சற்று விரிவாக ஹெலனுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் நீண்ட உரையாடலில் சொல்லப்படுகிறது.
டுபீன் எந்தச் சம்பவத்தையும் அதன் எல்லையைத் தாண்டி செல்ல அனுமதிப்பதில்லை. அவர் அச்சம்பவத்தின் எல்லையென்று எதை இலக்காக வைத்துள்ளார் என்பதே வாசகன் முன்புள்ள கேள்வி.
பாலுடனான உரையாடலில் ஹெலனின் கடந்த காலம் குறித்த சில விஷயங்கள் தெரியவருகின்றன. இங்கு ஆசிரியர் இரு பாத்திரங்களை பேசவைத்து அதன் மூலம் சில விஷயங்கள் வெளிக்கொணரும்போது நேரடியாக ஏன் இப்படி எளிதான வழியில் சொல்லவேண்டும், ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஓரிரு நாட்களில் இத்தகைய விஷயங்களை (கணவனிடம் பகிர்ந்திராத) பேசிக்கொள்வார்களா, ‘நுட்பம்’ என எதுவும் கிடையாதோ என்று தோன்றினால் “..being led towards feeling with as much subtlety..” என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நண்பனின் உடல் நிலை குறித்த கவலையில் பாலும், கடந்த காலத்தின் நிழல் மீண்டும் தன் மீதும் படருமோ என்ற பதற்றத்தில் ஹெலனும் இருக்கையில், அதற்கான வடிகாலாக அவர்கள் பேசிக்கொள்வது இருக்கலாம். இல்லற வாழ்க்கையில் இத்தகைய அசாதாரணமான சூழலை சந்திக்காத நிலையில், உறவுகளை ஒதுக்கிவிட்ட அவள் தன் பயங்கள் குறித்து கணவனிடம் பகிர்ந்து கொள்ளமுடியாதபடி மனத்தை பயிற்றுவித்திருப்பதும் இயல்பானதே. இந்த உரையாடலால் இருவரிடையேயும் ஆழமான நட்பு எதுவும் உருவாவதில்லை. அந்த நேரத்தில் இருந்த மனநிலையில் சில விஷயங்களை பரிமாறிக் கொண்டவர்களாக, பரஸ்பரம் மரியாதை உடையவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த உரையாடலில் அதனுடன் நேரடியாக சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம் புதைந்துள்ளது. “… recognizing when he saw her how much she feared her own passionate attachment to him, how much she would hold back for a while,” என்று நாவலின் ஆரம்பத்தில் தன் அன்பைக் கண்டு அவளே அச்சமடைவது பற்றியும், தனக்கு அவ்வப்போது ஏற்படும் மனநிலை மாற்றங்களை (black moods) தன் கணவன் சகித்துக்கொள்வது பற்றியும் அவர் கூறுகிறார். இவற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முயலும் வாசகன் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடியாக, பால்/ஹெலன் உரையாடலை அதற்கு முன்பு சாதாரணமாக சொல்லிச் செல்லப்பட்ட விஷயங்களுடனும், பின்னர் நடப்பதையும்/பேசப்படுவதையும் இணைத்துப் பார்ப்பது உள்ளது.
டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் சம்பவம் ஒன்று நாவலில் வருகிறது. மூதாட்டி கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறாள், அதில் தேர்ச்சி பெறுகிறாள் என்பது, இறுக்கமான சூழலை சமன் செய்யும், செயற்கையான உற்சாகம் தோற்றுவிக்கும் (feel good) நிகழ்வாக ஆகியிருக்கும். ஆனால் டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்வதை பார்த்துக்கொண்டிருக்கும் லில்லியும் ஹெலனும் சாதாரணமாக பேச ஆரம்பித்து இன்னொரு வாக்குவாதத்திற்கான ஆரம்பத்திற்கு சென்று விடுகிறார்கள். கார் ஓட்டுவது என்னும் நிகழ்வு பின்னுக்கு சென்று விடுகிறது. ‘It’s a vale of tears, Lily… It’s a vale of tears, and there’s nothing we can do,’ என்று ஒரு இடத்தில் டோரா லில்லியிடம் சொல்கிறார். வாழ்வின் துயரை முற்றிலும் துடைக்க முடியாவிட்டாலும், துயரை சந்தோஷத்தால் எப்போதும் சமன் செய்ய முடியாவிட்டாலும், தற்காலிக ஆசுவாசம் அளிக்கும் கணங்களை (moments of reprieve) நாம் எத்தேச்சையாக கண்டடைய முடியும்.
ஹெலன்/ பால் உரையாடல் அதைத் தாண்டி சில விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க, கார் ஓட்டும் நிகழ்விற்கு, ஆசுவாசமளிக்கும் ஒரு கணத்தின் பெறுமானத்தையே டுபீன் அளிக்கிறார். நாவலின் சில நிகழ்வுகள் ஓர் உணர்வு நிலையை மட்டுமே முன்வைத்தும், சில நிகழ்வுகள் அவற்றின் பின்னால் சிலவற்றை பொதித்துள்ளதாகவும் இருப்பதால், முதல் வகை நிகழ்வுகளால், இரண்டாம் வகையையும் அவ்வாறே எண்ணி வாசகன் கடந்து சென்று விடக்கூடிய வாசிப்பு மனநிலை அவனையறியாமலே உருவாகக்கூடும்.
Tóibín is suspicious, he says, of “literature that depends on plot”. He doesn’t think more should be required than “a portrait of a sensibility”” என்பதற்கேற்ப, மூன்று பெண்களும் ஒன்றாக இருக்கும் சில நாட்களில் அடைபட்டுள்ள உணர்வுகள் பீறிட்டெழுந்து (catharsis), அனைத்து பிணக்குகளும் தீர்ந்து விடுவது என்பது இந்த நாவலின் கரு (plot) அல்ல. பாசத்தை வெளிக்காட்ட முடியாத மனநிலை/ சூழல், அதனால் ஒருவரையொருவர் தவறாக புரிந்துகொண்டு/ புரிந்து கொள்ளப்பட்டு (அவரவர் கோணத்தில் சரியாக), விரிசல் பெரிதாகி ஒருவரை தன் வாழ்விலிருந்து ஒதுக்கினாலும், அவரின் அன்பிற்காக உள்ளூர ஏங்கிக்கொண்டே இருத்தல், அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியை எப்போதாவது அன்பின் கீற்று குறைத்தால், அந்த அன்பைக் கண்டு ஒரே நேரத்தில் ஆசுவாசமும்/ அந்த அன்பு மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடுமோ என்று அச்சமும் கொள்ளுதல், அந்த அச்சத்தால் மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து மீண்டும் அதே சுழற்சியை ஆரம்பித்தல் என மூடிய மனதின் புழுக்கத்தை தாள முடியாமல் அதே நேரம் மனதின் கதவுகளைத் திறக்கத் துணிவும் இல்லாமல் துன்புறுபவர்களின் உணர்வுகளின் சிக்கலான சித்திரம் (டுபீன், ஹெலனின் எண்ணங்களின் வழியாக சொல்லும் Imaginings and resonances and pain and small longings and prejudices) இந்நாவலின் “portrait of a sensibility”யாக உருவாகிறது.
Ending a novel is almost like putting a child to sleep – it can’t be done abruptly,” என்று ஒரு பேட்டியில் டுபீன் சொல்கிறார். பல வருட விரிசல் சில நாட்களில் சரியாகப் போவதில்லை என்றாலும் இணக்கமான சூழலுக்கான (நல்லுறவுக்கல்ல) முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அதுவும் கூட நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகச் சொல்லாமல், வாசகனின் எதிர்பார்ப்பாக, கவனத்துடன், அதே நேரம் பொருத்தமாக முடித்து வைக்கிறது.

Monday, October 19, 2015

‘இந்தியா 1948’ – நான்கு பெண்கள் - அசோகமித்திரன்

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2015/10/11/india-1948/
----------------------- 
அசோகமித்திரனின் ‘இந்தியா 1948‘ (குறு)நாவலில், அமெரிக்காவிற்கு அலுவல் சம்பந்தமாகச் செல்லும், திருமணமான கதைசொல்லி, அங்கு படிக்க வந்திருக்கும் விதவை இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இந்தியாவிற்கு திரும்பும் அவன், இரண்டாம் திருமணம் குறித்து தன் குடும்பத்திற்கு தெரிந்து விடுமோ என்ற பயத்துடனும், தன் செயல் குறித்த குற்ற உணர்வுடனும் இருப்பது என நகரும் கதை, சுதந்திரத்திற்கு முன் அமெரிக்காவிற்குச் சென்று, சுதந்திரம் அடைந்தபின் திரும்பும் கதைசொல்லி காணும் சமூக/ அரசியலின் நுட்பமான மாற்றங்களை பதிவு செய்கிறது. கதைசொல்லியின் கோணத்திலேயே நகரும் கதையில், அவன் வாழ்வில் உள்ள பெண்களின் ஆளுமை (சிறிதளவே விவரிக்கப்பட்டாலும்) கதைசொல்லியை விட அதிகமாக வாசகனை ஈர்க்கிறது. குறிப்பாக, கதைசொல்லியின் தாயார், அவன் முதல் மனைவி பார்வதி, இரண்டாவதாக திருமணம் செய்யும் லட்சுமி மற்றும் அவளின் தாய்.
இளம் வயதில் கணவனை இழந்து, சகோதர்களுடன் வசித்து குழந்தைகளை வளர்த்தவர் கதைசொல்லியின் தாய். அவள் அண்ணன், சந்நியாசம் பெற முடிவு செய்து அதற்கு முன் தன் மகள் பார்வதியை கதைசொல்லிக்கு மணம் செய்ய முடிவு செய்யும்போதும் அவருக்கு அது குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை. மகன் வேலைக்குச் சென்று நல்ல நிலைமைக்கு வந்தவுடன், அவரது தாயின் ஆளுமை உருப்பெறுகிறது- அல்லது, அதுவரை அடக்கி/ மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெளிவருகிறது. இது அவர் ஏதோ, மருமகளை கொடுமை செய்கிறார் அல்லது பகட்டாக வாழ ஆரம்பிக்கிறார் என்ற பொருளில் சொல்லப்படுவதில்லை. மருகளை அவர் நன்றாகவே நடத்துகிறார், ஆனால் தன மருமகளுக்கு அவள் எப்போதும் உறவு பேண விரும்பாத மாமியார் தான், தோழி அல்ல, என்பது நுட்பமாக உணர்த்தப்படுகிறது. தன் இரண்டாவது மகனுக்கு பெண் தேடும்போது, அவர் கொள்ளும் உற்சாகம், மணம் பேசப்படும் பெண்கள் குறித்த சந்தேகங்களை அவ்வப்போது கேட்டுத் தீர்த்துக் கொள்வது என அவர் நடந்து கொள்வது ஏதோ படாடோபத்தின் வெளிப்பாடாக இல்லாமல் முதல் மகனின் திருமணத்தில் எந்த வார்த்தையும்/ கருத்தும் பேச முடியாததை ஈடு செய்யும் ஒன்றாகவே பார்க்கலாம். குடும்பத்தில் இறுதி முடிவு எடுப்பவர் என்ற அளவில், அனைத்தும் இயல்பாகவே அவர் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது
ஐந்து வயதில் திருமணமாகி பத்து வயதில் விதவையான லட்சுமி, சமூகவியல் துறையில்டாக்டரேட் செய்ய அமெரிக்கா சென்று படிக்குமளவிற்கு திடசித்தம் கொண்டவள், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். லட்சுமியை ஒரு ஆபத்திலிருந்து கதைசொல்லி காப்பாற்றி , இக்கட்டான சூழலில் அவளை மணம் முடிக்க வேண்டியுள்ளது போன்றெல்லாம் நாடகீயமாக எதுவும் நடப்பதில்லை. ‘லட்சுமி’ என்பவர் உரையாற்றப் போவதாக உள்ளூர் ஆங்கில பத்திரிகையில் படித்து, அவர் தமிழர் என்று எண்ணி கதைசொல்லி செல்கிறார். அங்கு அவர் ‘லட்சுமி’ அல்ல ‘லக்ஷ்மி’ என்ற குஜராத்திப் பெண் என்று தெரிகிறது (Lakshmi என்றே ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் புரிதலில் நிகழும் குழப்பத்தை அ.மி நுட்பமாகச் சுட்டுகிறார்). அவர்களின் அறிமுகம் இவ்வாறு நிகழ்கிறது.
லட்சுமி அமேரிக்கா வந்த இரு மாதங்களிலேயே எந்தெந்த ஊர்களில் எங்கு சைவ உணவு கிடைக்கும் என்ற பட்டியலைத் தயாரிக்கும் ஒழுங்கு உள்ளவள், படிப்பு முடிந்து இந்தியா வந்தவுடன் இயல்பாக இருக்க முடியாத குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி தொடங்க திட்டம் வைத்திருக்கிறாள். சிறுவயதிலேயே பல அனுபவங்களைப் பெற்று மன முதிர்ச்சி அடைந்த லட்சுமி ஓர் ஆணுடனான நான்காவது சந்திப்பிலேயே, என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ஏன் கேட்க வேண்டும், அவன் திருமணமானவன் என்று தெரிய வந்த பிறகும் தன் முடிவில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்? கதைசொல்லியிடம் அவள் எதிர்பார்ப்பது என்ன? காமமா, பாதுகாப்பா இல்லை பரிவா?
“நீங்கள் ஒருமுறைகூட என்னை உங்கள் அறைக்குக் கூப்பிடவில்லை. அதுவே எனக்கு உங்கள் மீது நம்பிக்கை தந்தது.” என்று சொல்லும் போது அவள் எதிர்பார்ப்பது சமமான நிலையில் இருக்கும் தோழமையை, அதனால் உருவாகும் அன்பை என்று புரிந்து கொள்ளலாம். லட்சுமியின் முடிவு கதைசொல்லியின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவளை மணமானவனை மயக்கும் குடிகெடுப்பவள் (home-breaker) என்று சொல்ல முடியுமா என்ன?
லட்சுமியின் தாயாரும் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டு விதவையானவர். விதவையான மகளின் எண்ணங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார். உனக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தால் திருமணம் செய்து கொள் என்று சொல்லுமளவிற்கு மகள் மீது அவருக்கும், அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு லட்சுமிக்கு அவரிடமும் பரஸ்பரம் புரிதல் உள்ளது. தன் மகள் வாழ வேண்டும் என்ற பரிதவிப்பு இருந்தாலும், திருமணம் செய்து கொண்டவனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் கதைசொல்லி இந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டானா என்று கேட்டாலும், அது குறித்து அவர் வற்புறுத்துவதில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
இந்த நான்கு பெண்களில், கதைசொல்லியின் செயலால் மிகவும் பாதிக்கப்படப்போகும் முதல் மனைவியான பார்வதி பற்றி வாசகனுக்கு தெரியவருவது குறைவு தான் என்பது முதல் பார்வையில் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் குற்ற உணர்வால், மனைவியை எதிர்கொள்ளும் துணிவு இல்லாத கதைசொல்லி அவளைக் குறித்து/ அவர்களிடையே உள்ள உறவு குறித்து வாசகனிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். தந்தை தனக்கு தன்னிச்சையாக முடிவு செய்த திருமணத்தைக் குறித்தும், கணவன் குறித்தும் அவள் என்ன நினைக்கிறாள். அவளைக் குறித்தும்/ அவர்களுக்கிடையே பெரிய உரையாடல் என்று ஒன்றும் நடப்பது போலவும் கதைசொல்லி எதுவும் சொல்வதில்லை என்றாலும், அவள், இரண்டாம் திருமணம் செய்தது குறித்து தனக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் மனப்போரட்டம் குறித்து சந்தேகம் கொண்டிருப்பாள் என்றே எண்ணுகிறான். வாயில்லாப் பூச்சி என்று அவளை எண்ண முடியாது, தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுப் பெண்ணை (வேறு மொழி/ ஜாதியாக இருந்தாலும்), கணவனின் தம்பி மணிக்கு மணம் முடிக்கும் ஆசை பார்வதிக்கு உள்ளது, அது சில காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், மணியின் மனைவியுடன் சுமுகமாகவே இருக்கிறாள். தெரிந்தவர் என்று கூறி லட்சுமியின் தாயார் வீட்டிற்கு அவர்களை கதைசொல்லி அழைத்துச் செல்வதும், அவர் இவர்கள் வீட்டிற்கு வருவதும், ஏதோ பிரச்சனை உள்ளது என்று பார்வதியின் உள்ளுணர்வில் கண்டிப்பாக தோன்றி இருக்கும். ஆனாலும் அதைப் பற்றி தானாக எதுவும் விசாரிக்காமல் இருக்கிறாள். உண்மை வெளிவந்தவுடன் அவள் முதலில் வருந்தினாலும், தந்தை சொல்வதைக் கேட்டு சற்றே தெளிவடைகிறாள் (அதே நேரம் கதைசொல்லியின் தாயால் அவன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை).
அடுத்து என்ன செய்வதென்று யாரும் முடிவெடுக்க முடியாமல் உள்ள நிலையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்கிறது. கதைசொல்லியின் குடும்பத்தினர், லட்சுமியையும் அவள் தாயரையும் சந்திக்கின்றனர். கதை இங்கு முடிய அடுத்து என்ன நிகழும்?
நாவலில் ஒரு சம்பவம். கதைசொல்லிக்கு அலுவலகத்திலிருந்து கார் அளிக்கப்படுகிறது. ஆனால் கதைசொல்லி காரில் செல்லாமல், ரயிலில் தான் அலுவலகம் செல்கிறார். ஒரு நாள் அலுவல் முடிந்து வீட்டிற்கு வர, வீடு பூட்டி இருப்பதோடு காரும் இல்லை. பிறகு மணியின் மனைவி ஜானகி கார் ஓட்டிவர, பார்வதியும்/ கதைசொல்லியின் தாயாரும் கடைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். உனக்கு கார் ஓட்டத் தெரியுமா, ஓட்டும் ஒரிமம் உள்ளதா என்று சற்றே ஆச்சரியத்தோடு கதைசொல்லி கேட்க, 18 வயதிலேயே கற்றுக்கொண்டதாக சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறாள் ஜானகி.
இந்தக் கதையின் பெண்கள் அனைவரும் இதைப் போலவே, கதைசொல்லியும்/ வாசகனும் அறிந்திராத, சரியான நேரத்தில் வெளிப்படும் ஆளுமைத்திறனும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள். எனவே கதை தீர்வு சொல்லாமல் முடியும் இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தோதான முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்று நம்பலாம். திடசித்தம் படைத்த, கதைசொல்லியின் மேல் அன்பும் கரிசனமும் கொண்ட இத்தனை பெண்கள் அவன் வாழ்வில் இருப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
பி.கு
அ.மியின் ‘பம்பாய் 1944‘ குறுநாவலின் தொடர்ச்சியாக, இன்னொரு பாத்திரத்தின் பார்வையில் விரியும் நாவலாக ‘இந்தியா 1948‘ஐ பார்க்கலாம். இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம் என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பதும் ஒன்றை ஒன்று நிரப்ப உதவும்.

Monday, October 12, 2015

அசோகமித்திரனின் “இரண்டு விரல் தட்டச்சு”

பதாகை இதழில் வெளிவந்தது - (http://padhaakai.com/2015/10/04/asokamitran/)
துர்ச்சகுனங்கள் என்று சரளா நம்பும் சில சம்பவங்கள் காலையில் அவள் வீட்டில் நடக்கின்றன. தன் கணவனுடன் வண்டியில் அலுவலகம் செல்லும்போது அவள் அலைபேசியில் பேசவேண்டிய சூழலில், கணவன் வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு கோர விபத்து நிகழ்கிறது. வண்டி ஓட்டும்போது அலைபேசியில் பேசக்கூடாது என்ற செய்தியை எடுத்துக் கொள்ளவேண்டிய கதை மட்டுமா இது? நேரடியான/ விரிவான விவரிப்புக்கள் இல்லாமல், சரளாவின் கணவன் பெயர் ‘ஜான்ஸன்’, தம்பதியர் தனியே வசிக்கிறார்கள், அலுவலகத்திற்கு அவர்கள் தயாராவது என்று நமக்கு அவர்கள் குறித்து அசோகமித்திரன் சொல்லிச் செல்வது, அவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்களா, இரு தரப்பு பெற்றோர்களும் அதை ஏற்றுக்கொண்டார்களா, தம்பதியரின் கனவுகள் என்னவாக இருந்திருக்கும் போன்ற கேள்விகளை எழுப்புவதால், சற்று தொலைவில் நடக்கும் விபத்தைப் பார்த்து ஒரு கணம் வருந்தி விட்டு விலகிச் செல்வதைப் போல் இல்லாமல், வாசகனை விபத்திற்கு மிக அருகில் நிறுத்தி சஞ்சலமடையச் செய்கிறது.
இப்படி, ஒன்றைத் தொட்டு ஆரம்பித்து, வேறு பல விஷயங்களைத் தொட்டுச் சென்று ஒரு சரடாக இணைப்பது அமி.யின் புனைவுலகில் புதிதில்லை. 1998ல் வெளிவந்த அ.மியின் ‘புதிய பயிற்சி’ கதையில் கணினி பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கும் மகள் அலுவலகத்திலிருந்து திரும்புவதை எதிர்பார்த்து அவர் தந்தை பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். மகளின் வரவுக்காக காத்திருக்கும் அந்தப் புள்ளியில் ஆரம்பித்து, சாலைகளின் மோசமான நிலைமை, மகளின் வேலைப்பளு, கணினி யுகம் மலர்வதைப் பற்றிய புரிந்தும்-புரியாததுமாகிய அவருடைய சிந்தனைகள் என்று கதை விரிகிறது. மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்ற நிலையத்திலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்வதால்- அவர் மகளே அப்படித்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்- பயிற்சியின் தரம் எப்படி இருக்கும் என்பது போன்ற கூர்மையான அவதானிப்பும் உள்ளது. தன் மகளே தனக்கு போட்டியாளர்களை உற்பத்தி செய்கிறாளே என்ற அவரின் சிந்தனையுடன் கதை முடியும்போது (இத்தனை ஆண்டுகளில் தோன்றிய கணினி நிறுவனங்கள், அங்கு பயிற்சி பெறுபவர்கள்/ பெற்றவர்கள் எண்ணிக்கையும், அவர்களுக்கு இன்று காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்) மீண்டும் தந்தையாகி விடுகிறார். இந்தக் கதையை இங்கு குறிப்பிடுவது இதுவும் ‘சகுனம்’ கதை போல் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்வைத்து ஆரம்பித்து, அதை விரித்துச் செல்கிறது என்பதால். அ.மி எப்போதும் சமூக மாற்றங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், அது குறித்த நுட்பமான அவதானிப்புக்கள் அவரிடம் உள்ளன என்பதும் தெரிகிறது.
இப்படி விரிந்து செல்லும் தன்மையை ‘இரண்டு விரல் தட்டச்சு’ தொகுப்பின் பல கதைகளில் காண்கிறோம். ‘உறுப்பு அறுவடை’, கதைசொல்லியின் பேத்தியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் உரிமையாளனுடன் கதைசொல்லியின் உரையாடலாக ஆரம்பிக்கும் கதை, வெகு தொலைவில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது, சாலைகளின் மோசமான நிலை, வண்டிகளுக்கு ஏற்படும் விபத்து என்று விரியும்போது இதுவும் இன்றைய சூழல் பற்றிய விமர்சனமா என்று தோன்றலாம். ஆனால் அ.மியின் புனைவுலகு அப்படி ஒரு நேர்க்கோட்டுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. வேன் உரிமையாளர் சரவணனின் மனைவியை கதைசொல்லியும் நாமும் சந்திக்கிறோம். குடித்து கல்லீரல் கெட்டுக் கிடக்கும் சரவணன் பற்றி தெரிய வர, அவளுக்கு கதைசொல்லி உதவுகிறார். அந்தப் பெண்மணி கணவனுக்காக படும் இன்னல்களைப் பார்த்து “நான் நினைத்துப் பார்த்தேன். இந்த வியாதி சரவணன் மனைவிக்கு ஏற்பட்டிருந்தால் சரவணன் யாரையாவது உதவிக்குத் தேடித் போவானா” என்று கதைசொல்லி நினைப்பது. அ.மியின் புனைவுலகில் எங்கும் தென்படும் பெண்களின் துயரின் மீதுள்ள கரிசனத்திற்கு ஒரு சான்று.
சிறு பிள்ளைகளைப் பறி கொடுப்பவர்கள், இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவருக்கு மகள்களாகப் பிறந்து, வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு, படிப்பை நிறுத்தி பின் தந்தையின் உறவினர்களால் வீட்டை விட்டு துரத்தப்படும் போது விபரீத முடிவெடுப்பவர்கள் (ஒரு நண்பனைத் தேடி), என்று பல கதைகளின் பாத்திரங்கள் துயரின் நிழலில் தான் உள்ளார்கள். அதே நேரம் இவர்கள் எல்லோரும் விதியே என்று உட்கார்ந்து விடுபவர்களும் அல்ல. கணவனால் கைவிடப்பட்ட பெண் நடத்தும் தட்டச்சு நிறுவனம், அதில் படிக்க வரும் – குடிகார தந்தையினால் பாதிக்கப்பட்ட – இளம் பெண்கள், தங்கள் சூழலைத் தாண்டிச் செல்லும் உந்துதல் உள்ளவர்கள்.
ஏதோ பூஜை என்று கிளம்பிச் சென்ற கணவன் திரும்பி வராமல் போக, ஒரே ஒரு முறை தன் கணவனுடன் பார்த்த கதைசொல்லியிடம் அவனைத் தேடும்படி உதவி கேட்குமளவிற்கு -இந்தப் பெண்மணிக்கும், ‘உறுப்பு அறுவடை’ கதையின் ‘சரவணன்’ மனைவிக்கும் அதிக வித்தியாசம் இல்லை- அவர்களிடம் செயலூக்கம் உண்டு(அகோரத் தபசி).
துயர் நிறைந்த வாழ்வெனும்போது, ஜோசியம்/ ஜோசியர்கள் அவ்வப்போது தலைகாட்டுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை. கண்டம் கதையில் ஜோசியம் தெரிந்த (ஆனால் ஜோசியர் அல்ல) ஒருவர் வலிய வந்து தனக்குத் தெரிந்தவர் குழந்தைகளுக்கு ஜோசியம் பார்க்கிறார். “எந்தக் குழந்தைக்கும் கண்டம் இல்லாமல் பார்த்துக்கொள்” என்ற வேண்டுதலுடன் கதை முடியும்போது, அது ஜோசியம்/ அதன் பாதிப்பு இவற்றைப் பற்றிய கதையாக இல்லாமல், மானுட நேசத்தைப் பற்றிய அ.மியின் இன்னொரு கதையாக மாறுகிறது. ‘ஜோதிடம் பற்றி ‘இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதை’ கதையிலும் ஜோசியம் வருகிறது, கண்டம் உள்ள கணவனை மலைப்பாம்பிடமிருந்து மனைவி காப்பாற்றுகிறார். விதியை மதியால் வெல்லும் இன்னொரு கதை என்று நினைப்பதற்குள், “ஜோதிடர்கள் கிரகங்களையும் ராசிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் ஒரு மலைப்பாம்பு இரையைத் தேடித் போய்க் கொண்டிருக்கிறது” என்று கதை முடிவது புன்சிரிப்பை வரவழைப்பதோடு, மலைப்பாம்பு இரையைத் தேடி (தொலைத்து) அலைவது, என்னதான் ஜோசியம்/ பிரார்த்தனை என்றிருந்தாலும், மனிதர்களும் அவரவர் இரையைத் தேடி அலைந்து அதில் வெற்றி/ தோல்வி பெறுவதை நினைவூட்டுகிறது. பள்ளி ஆண்டு விழாவில், பல இரைச்சலுக்கு இடையில் தன் அக்கா பாடியதைப் பற்றி “எங்கள்வரை அது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் யாரும் கேட்க முடியாதபடி ஒரே கூச்சல் குழப்பம்” என்று சொல்வது அ.மியின் தாழ்குரல் நகைச்சுவையுணர்விற்கு இன்னொரு சான்று.
அ.மியின் கதைத் தொகுப்பில் ‘லான்ஸர் பாரக்ஸ்’ இல்லாமலும், அதில் ‘மாடுகள்’ உலா வராமலும் இருந்தால் நிறைவின்மை இருக்குமல்லவா? இதில் இரண்டு கதைகளில் மாடு வருகிறது. மாடு வளர்ப்பு, அது ஓடிப்போவது என ஆரம்பித்து, பாழடைந்த கோட்டையில், அதன் வரலாறு குறித்த கதைசொல்லியின் கற்பனைகளோடு இணையும் ‘கோட்டை’ சிறுகதை, கோட்டையை மீண்டும் ஒரு முறை நன்றாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாமல் “இனிமேல் முடியவே முடியாது என்றிருந்த நீண்ட பட்டியலில் அந்தக் கோட்டையும் சேர்ந்து கொண்டது” என்று கதைசொல்லி சொல்லும் இடத்தில்,ஆயாசமோ, வருத்தமோ இல்லாமல், எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனப்பக்குவமே தெரிவதோடு, சிறு வயது நினைவுகள் என்ற இடத்திலிருந்து தாவி, கதைசொல்லியின் நிராசைகளின் புகலிடமான, அந்தரங்கமான இன்னொரு இடத்திற்குச் செல்கிறது. ‘தோல் பை’ கதையிலும் மாடு/ மாடு வளர்ப்புப் புராணம், ‘சுந்தர்'(!!) என்ற மாடு வருகிறது. மாடுகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல் துயரத்தைத் தருவதைப் பார்க்கிறோம். (தோல் பையைப் பார்த்து “எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் மாடுகள் இப்படித்தான் முடிய வேண்டியிருக்கிறது”, என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார்)
சம்பவம் 1
தனக்கு கடன் கொடுக்கும் சரவணனுடன் கதைசொல்லிக்கு சற்றே கடுமையான உரையாடல் நடக்கிறது (வாடிக்கை). அடுத்த மாதம் சரவணனைப் பார்க்கும் கதைசொல்லி, அவன் மனைவி அவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளதை அறிந்து, ஒரு நாள் விடுமுறை எடுத்து, தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று சமாதானம் செய்கிறார்.
சம்பவம் 2
‘இரு நண்பர்கள்’ கதையில், வேலை தேடும் இருவரில் ஒருவர் தான் விண்ணப்பித்துள்ள வேலைக்கு, அது குறித்த நம்பிக்கை இல்லாத தன் நண்பனையும் விண்ணப்பிக்க வலியுறுத்துகிறான். வலியுறுத்துபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து, தன் நண்பனுக்கு அந்த வேலை கிடைத்தது என்று அறியும் போது அவனுக்கு எவ்வளவு மகிழ்சிகரமான விஷயம். ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ? “அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது”
சம்பவம் 3
தாய் இறந்த செய்தியைத் தெரிவிக்க, நள்ளிரவு தாண்டி தந்தி அலுவலகம் செல்லும் சங்கரன் (தந்தி), அலுவலர்கள் தூக்க கலக்கத்திலும் தனக்கு சில சிறு உதவிகள் செய்வதைப் பார்த்து “நள்ளிரவு தாண்டி இரண்டு மணி நேரம் கழித்தும் ஒரு தந்திக்காரருக்கு இவ்வளவு அனுதாபம் கொள்ளத் தோன்றுகிறது” என்று நினைக்கிறான்.
முதல் சம்பவத்தில் பண நெருக்கடியில் இருக்கும் கதைசொல்லி, தொழில் முறையில் மட்டுமே தெரிந்தவனுக்காக வலியச் சென்று உதவுகிறார். வெறும் பண பரிவர்த்தனைதான் என்று பார்க்காமல் “அவன் எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கான். அதெல்லாம் எதுக்கு. அந்தக் குழந்தைங்க படிப்பு கெடக்கூடாது” என்கிறார். இரண்டாவது சம்பவத்தில் முதல் நண்பன், வேலை கிடைத்த விஷயம் தனக்கு சொல்லப்படாதது குறித்து துணுக்குற்றாலும், அது குறித்து மொத்தத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். மூன்றாவது சம்பவத்தில் தாயை இழந்த பெரிய துக்கத்திலும், தன் வேலையின் எல்லைகளைத் சற்றேத் தாண்டி உதவி செய்யும் நபரை சங்கரனால் கவனிக்க முடிகிறது.
மூன்று சம்பவங்களிலும் உள்ள ஒற்றுமை சக மனிதரிடம் கரிசனம், மனித நேயம் வெளிப்படும் இடங்கள். இவை வாழ்வை முற்றிலும் வெளிச்சமாக்கும் ஒளி அல்ல, என்றேனும் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை தரும் கீற்றுக்கள் மட்டுமே. தந்தி அலுவலக ஊழியர், தாய் மரணம் இல்லாத இன்னொரு செய்திக்காக சங்கரன் சென்றிருந்தால், நள்ளிரவைத் தாண்டிய அந்த வேளையில் எப்படி நடந்து கொண்டிருப்பார்? ‘வாடிக்கை’ கதையில், மனைவியை சமாதானம் செய்ததற்காக நன்றி சொல்ல வரும் சரவணனிடம், கதைசொல்லி ஐநூறு ருபாய் கடன் கேட்கிறார். ஆம், அவர் அந்த ஐநூறு ரூபாய்க்காக வேலூர் செல்லவில்லைதான், அதற்கு கூலியாக அந்தப் பணத்தைக் கேட்கவும் இல்லைதான், ஆனால் பணமுடைதான் அவர் வாழ்வின் யதார்த்தம் என்பதால், அவர் அப்படிக் கேட்பது தவிர்க்க முடியாததாகிறது.
ஆகாயத் தாமரை நாவலின் நாயகன் ரகுநாதன் ஒரு இக்கட்டில் இருக்கும் போது அவன் சிறு வயது/ கல்லூரித் தோழி மாலதியைச் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறான். அவர்களுக்கிடையே உள்ளது நட்பா அல்லது அதைத் தாண்டிய ஈர்ப்பா என்றெல்லாம் அ.மி சொல்வதில்லை. ஆனால் மாலதி ரகுநாதனுக்கு உதவ முயல்கிறாள், தனக்குத் தெரிந்த ஓர் இடத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறாள். அது பலனளிப்பதில்லை. நாவலில் ஒரு சில முறை மட்டுமே சந்திக்கும் அவர்கள், மீண்டும் தொடர்பற்று போகிறார்கள், மீண்டும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ நிலைமை சீராகி ரகுநாதன் நல்ல நிலைக்கு வந்துவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறிய சந்திப்பு, அவ்வளவுதான். அவர்களுக்கிடையே இயல்பாக மீண்டும் ஏற்படும் தொடர்பும் அதே போல் இயல்பாகவே முறிகிறது. மாலதியால் உதவ முடியவில்லை. தொடர்பில் இருக்க முடியவில்லை தான், ஆனால் அவள் பொறுப்புள்ள வேலையில் இருக்கிறாள், அதை அப்படியே விட்டுவிட்டு எப்போதும் ரகுநாதனுக்காக அலையவேண்டும் என்று சொல்ல முடியாது, அப்படிச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. மற்றவர்களுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளாமல், அதே நேரம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயலும் மாலதியை இந்தத் தொகுப்பில் உள்ள பாத்திரங்களோடு பொறுத்திப் பார்க்கலாம். யார் உதவ முன்வந்தாலும், இறுதியில் நமக்கு நாம்தான் உதவிக் கொண்டாக வேண்டும் என்ற புரிதலும் இதில் உள்ளது.
ஆனால், ஒரு போதும் நம்மை விட்டு நீங்காத துயரங்களை சுமந்தலையும் வாழ்வில், அடுத்த அடி எடுத்து வைத்து பயணத்தைத் தொடரும் ஊக்கத்தை இந்த நம்பிக்கை கீற்றுக்கள்தான் தருகின்றன. அவையே இந்தக் கதைகள் உள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ முழு தொகுப்பையுமே மானுட நேயத்தை எப்போதுமே வலியுறுத்தி வரும் அ.மியின் புனைவுலகின் மற்றுமொரு காத்திரமான பிரதிநிதியாகப் பார்க்கச் செய்கின்றன.